நாளிதழ் எரிப்பு வழக்கு: இறுதி விசாரணை தேதி டிச. 3-ல் முடிவு செய்யப்படும் - உயர் நீதிமன்றம் அறிவிப்பு

நாளிதழ் எரிப்பு வழக்கு: இறுதி விசாரணை தேதி டிச. 3-ல் முடிவு செய்யப்படும் - உயர் நீதிமன்றம் அறிவிப்பு
Updated on
1 min read

மதுரையில் நாளிதழ் அலுவலகத்தில் 9.5.2007-ம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் வினோத், கோபிநாத், முத்துராமலிங்கம் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அட்டாக் பாண்டி உட்பட 17 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இவர்கள் அனைவரையும் வழக்கில் இருந்து மதுரை நீதிமன்றம் 9.12.2009-ம் தேதி விடுதலை செய்தது.

இதனை எதிர்த்து சிபிஐ தரப்பிலும், வினோத்தின் தாயார் பூங்கொடி சார்பிலும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் பி.ஆர்.சிவகுமார், வி.எஸ்.ரவி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

சிபிஐ வழக்கறிஞர் ஜெயக் குமார், பூங்கொடியின் வழக்கறிஞர் ஆண்டிராஜ் ஆகியோர், இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைக்க தயாராக இருப்ப தாகத் தெரிவித்தனர். ஆனால், எதிர்மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராவதற்காக விசாரணையை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து விசாரணையை டிச. 3-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்று மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை நடைபெறும் நாள் முடிவு செய்யப்பட்டு, அதன்படி விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in