Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சசிகலா- ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுடன் சந்திப்பு: சுமார் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நேற்று இரவு காஞ்சிபுரம் சங்கர மடம் வந்தார். அவர் மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து சுமார் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர் சசிகலா. இவர் நேற்று முன்தினம் இரவுகாஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தார். அங்குஅவரை அர்ச்சகர்கள் வரவேற்றனர். அங்கு அம்மனை தரிசித்த பிறகு காஞ்சிபுரம் சங்கர மடம் வந்தார்.

அங்கு மஹா பெரியவர் பிருந்தாவனம், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில் வழிபாடு நடத்தினார். காவி நிற வஸ்திரங்களையும் வழங்கினார். இந்த வழிபாட்டின்போது சங்கரமடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உடன் இருந்தார். அப்போது நவலட்சுமிகள் அடங்கிய வெள்ளி பலகையை ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து சசிகலா ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை மடத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சுமார் ஒன்றரைமணி நேரம் இந்த ஆலோசனை நீடித்தது. அப்போது சசிகலாவின் குடும்பத்தினர் மட்டுமே அவருடன் இருந்தனர். தற்போதைய அரசியல்சூழல்கள் குறித்து இந்தச் சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. அவரது ஆலோசனை விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. பின்னர் சங்கரமடத்தில் மஹா பெரியவரின் தங்கரதத்தை இழுத்து சசிகலா வழிபாடு செய்தார்.

அங்கிருந்து உலகளந்த பெருமாள் கோயிலுக்குச் சென்றார். அங்கு அவரை அர்ச்சகர்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர். அங்கு வழிபாடு செய்துவிட்டு அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயிலுக்குச் சென்றார். அங்கும் வழிபாடு நடத்திவிட்டு சென்னை புறப்பட்டுச் சென்றார்.

அமமுக தொண்டர்கள்பலர் கோயில்கள் அருகேயும், சங்கர மடத்தின் அருகேயும் கூடினர். அவர்களை பார்த்து கையசைத்து விட்டுச் சென்ற சசிகலா நிர்வாகிகள் யாரையும் சந்திக்கவில்லை.

மயிலாப்பூரில் தரிசனம்

இதையடுத்து நேற்று மாலைசென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வந்த சசிகலா கபாலீஸ்வரரையும் பின்னர் கற்பகாம்பாளையும் தரிசித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x