Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு(95) பூரண குணமடைந்து நேற்று வீடு திரும்பினார்.
வயது மூப்பு காரணமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடாமல் இருந்து வந்த நல்லகண்ணு, கடந்த வாரத்தில் சைதாப்பேட்டையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டம் ஒன்றில் மட்டும் கலந்துகொண்டார்.
அதற்கு அடுத்த ஓரிரு நாளில் காய்ச்சல்,சளி பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து சென்னை,ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நல்லகண்ணு அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் தேரணிராஜன், சிறுநீரகவியல் துறை இயக்குநர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் நல்லகண்ணுவுக்கு சிகிச்சையளித்து வந்தனர்.
அதைத் தொடர்ந்து அவர் தொற்றிலிருந்து குணமடைந்தார். பரிசோதனைகளில் நல்லகண்ணுவின் உடல் உறுப்பு செயல்பாடுகள் சீராக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் நேற்று வீடு திரும்பினார்.
மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன், மருத்துவமனை நிர்வாகிகள் நல்லகண்ணுவை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT