Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM
கோவை தெற்கு தொகுதிக்கு செய்த பணிகளை கமல்ஹாசனால் பட்டியலிட முடியுமா என இறுதிகட்ட பிரச்சாரத்தில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வானதி சீனிவாசன், ராமநாதபுரம் 80 அடி சாலையில் நேற்று தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.
அதைத் தொடர்ந்து, சுங்கம், அரசு மருத்துவமனை, ஆட்சியர் அலுவலக சாலை, தெலுங்கு வீதி, கருப்ப கவுண்டர் வீதி, ராஜவீதி, ரங்கே கவுடர் வீதி, பால் மார்க்கெட், ராம் நகர், பட்டேல் சாலை, 100 அடி சாலை, காந்திபுரம், கிராஸ் கட் சாலை, செட்டி வீதி, மேட்டுப்பாளையம் சாலை, சாயிபாபாகாலனி, என்.எஸ்.ஆர் சாலை, சித்தாப்புதூர் ஆகிய இடங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
தொடர்ந்து, டாடாபாத் ஆறு முக்கு பகுதியில் பிரச்சாரத்தை வேட்பாளர் வானதி சீனிவாசன் நிறைவு செய்தார்.
பிரச்சாரத்தில், வேட்பாளர் வானதி சீனிவாசன் பேசும்போது, ‘‘ ஜெயலலிதா வின் மறைவுக்குப் பின்னர், ஆட்சி கலைந்துவிடுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கனவு கண்டார். அந்தக் கனவை அடித்து நொறுக்கி, முதல்வர் பழனிசாமி தொடர்ந்து ஆட்சியை நடத்தினார். காங்கிரஸ் ஆட்சியில் செய்ய முடியாத சாதனைகளை, பிரதமர் மோடி செய்து கொண்டுள்ளார். உலக நாடுகள் கையாண்டதை விட, கரோனா காலத்தை பிரதமர் மோடி அரசு சிறப்பாக கையாண்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் கோவை மக்களுக்கு செய்த பணிகள் குறித்த பட்டியலை என்னால் சொல்ல முடியும். அதேபோல, மநீம தலைவர் கமல்ஹாசன், அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு கோவை தெற்கு தொகுதிக்கு செய்த பணிகளை சொல்ல முடியுமா? கோவை தெற்கு தொகுதியின் முகமாக மாற ஆசைப்படும் கமல்ஹாசன் மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும்.
திமுக தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்தும் கட்சியாக உள்ளது. மத்திய அரசின் திட்டங்களை இந்த தொகுதிக்கு என்னால் பெற்றுத்தர முடியும். தாமரை சின்னத்துக்கு வாக்களித்து பொதுமக்கள் என்னை வெற்றி பெற வைக்க வேண்டும்,’’ என்றார்.
பிரச்சாரத்தின் போது பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT