Last Updated : 04 Apr, 2021 06:49 PM

 

Published : 04 Apr 2021 06:49 PM
Last Updated : 04 Apr 2021 06:49 PM

தமிழகத்தில் பெரியார் கொள்கைகளை அகற்றுவோம் என்ற பாஜக கருத்து; இபிஎஸ், ஓபிஎஸ் நிலைப்பாடு என்ன?- கார்த்தி சிதம்பரம் கேள்வி

சிவகங்கை

தமிழகத்தில் பெரியாரின் கொள்கைகளை அகற்றுவோம் என்ற பாஜகவின் கருத்துக்கு இபிஎஸ், ஓபிஎஸ் நிலைப்பாடு என்ன? என சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் சிவகங்கையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலைப் போன்று திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும். பாஜக தலைவர்களில் ஒருவரான தேஜஸ்வி சூர்யா பெரியாரின் கொள்கைகளை தமிழகத்தில் இருந்து அகற்றுவோம் என்று கூறியுள்ளார். அதற்கு இபிஎஸ், ஓபிஎஸ் நிலைபாடு என்ன?

தற்போது இருக்கும் அதிமுக தலைமை தங்களை எந்த அளவிற்கு அடிபாதாளத்திற்குக் கொண்டு சென்றுவிட்டது என்பதை அதிமுக தொண்டர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பாஜகவின் இந்தி, இந்துத்துவா கொள்கைகள் தமிழக மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகின்றன. பாஜக தலைவர்களின் பிரச்சாரங்களைத் தமிழக மக்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள். அதிகக் குற்றங்கள் நடக்கும் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் தமிழகத்தில் பிரச்சாரம் செய்கிறார். அவர் வந்தவுடனே கோவையில் கலவரம் நடக்கிறது. அதை எப்படித் தமிழக மக்கள் ஏற்பார்கள்?

எதிர்க்கட்சித் தலைவர்கள் வீடுகளில் நடக்கும் வருமான வரித்துறை சோதனைகளால் பாஜகவுக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள். இந்த சோதனை பாஜகவின் கீழ்த்தரமான அரசியலுக்கு எடுத்துக்காட்டு. அரசு அதிகாரிகளின் உதவியோடு தமிழகம் முழுவதும் பணப் பட்டுவாடா நடந்து வருகிறது. இதுகுறித்துப் பலமுறை தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. ஆனால் பணப் பட்டுவாடா செய்வதால் தேர்தல் முடிவுகளில் எந்த மாற்றம் ஏற்படாது''.

இவ்வாறு கார்த்தி சிதம்பரம் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x