Published : 04 Apr 2021 03:15 AM
Last Updated : 04 Apr 2021 03:15 AM

தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து புதுச்சேரியில் விஜயகாந்த் பிரச்சாரம்

புதுச்சேரி பாகூர் பகுதியில் வாக்கு சேகரித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

புதுச்சேரியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வேனில் அமர்ந்தபடியே நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக 26 இடங்களில் தனித்துப் போட்டியிடுகிறது. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு தேமுதிக தலைவர் விஜயாந்த் புதுச்சேரிக்கு வந்தார். இரவு தவளக்குப்பம் அருகே உள்ள பூரணாங்குப்பம் புதுக்குப்பத்தில் தனியார்ஓட்டலில் தங்கியிருந்த அவர்,நேற்று மணவெளி தொகுதி தேமுதிக வேட்பாளர் திருநாவுக்கரசு, ஏம்பலம் தொகுதி வேட்பாளர் பன், பாகூர் தொகுதி வேட்பாளரும், அக்கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளருமான வி.பி.பி வேலுவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

தவளக்குப்பம் சந்திப்பில் பிரச்சாரத்தை தொடங்கிய விஜயகாந்த் அங்கு தனது பிரச்சார வேனில் அமர்ந்தபடி தொண்டர்களை பார்த்து கைகளை அசைத்தும், கும்பிட்டும், வெற்றியைக் குறிப்பிடும் வகையில் சைகை செய்தபடியும் சில நிமிடங்கள் பிரச்சாரம் செய்தார். பின்னர், அங்கிருந்து கிளம்பி ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட பின்னாச்சிக்குப்பம் சாலை, பாகூர் பேட் பகுதி, மாட வீதி வழியாக சென்று பாகூர் தொகுதிக்குட்பட்ட மாதா கோயில் சந்திப்பை அடைந்தார். அங்கும் சில நிமிடங்கள் சைகையால் வாக்கு சேகரித்த விஜயகாந்த், பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கன்னியக்கோயில், முள்ளோடை வழியாக தமிழகம் புறப்பட்டு சென்றார். இதில் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x