Published : 04 Apr 2021 03:16 AM
Last Updated : 04 Apr 2021 03:16 AM
முன் எப்போதும் இல்லாத வகையில் இந்தத் தேர்தலில் அனைத்துக் கட்சியினரும் ‘சென்டிமென்ட்’ ஆயுதத்தை ஏந்தி களமிறங்கியிருக்கின்றனர். இதில், வாக்காளர்கள் திக்குமுக்காடிப் போயிருக்கின்றனர்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். ஊர்கள் தோறும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 30-ம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். உடனே, எம்ஆர்கே.பன்னீர்செல்வத்தின் மகனும் எம்ஆர்கே கல்வி குழும தலைவருமான கதிரவன் களத்தில் குதித்து, தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
கன்னிப் பிரச்சாரத்தை தொடங்கிய கதிரவன், “அப்பாவுக்கு உடம்பு சரியில்லை; அமைச்சராக, எம்எல்ஏவாக இருந்து இந்தத் தொகுதிக்கு நிறைய செய்துள்ளார். அவர் பணி தொடர, அவருக்கு வாக்களிக்க வேண்டும். அவருடைய பிரதிநிதியாக வந்து கேட்கிறேன் வாய்ப்பளிக்க வேண்டும்” என்று நெகிழ்ச்சியோடு கேட்டு வருகிறார்.
இதே தொகுதியில் அதிமுக சார்பில் களம் காண்கிறார் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம். கூட்டணிக் கட்சியினருடன் தெருத்தெருவாக வலம் வந்து வாக்கு சேகரித்து வருகிறார்.
ஒரு இடத்தில் 10 பேரை பார்த்தால் பிரச்சார வாகனத்தில் இருந்து உடனே கீழே இறங்கி வந்து பேசுகிறார். “உங்கள் பிரச்சினைகளைக் கூறுங்கள், வெற்றி பெற்றவுடன் நான் தீர்த்து வைக்கிறேன். இத்தொகுதியில் போட்டியிடும் முதல் பெண் வேட்பாளர் நான். 2 முறை எம்எல்ஏவாகவும், ஒரு முறை அமைச்சராகவும் இருந்துள்ளேன். மக்கள் பிரச்சினைகளை என்னால் நன்கு உணர முடியும். உங்களுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்து அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன்” என்று கூறி வாஞ்சையோடு வாக்கு கேட்டு வருகிறார். இருவரின் சென்டிமென்ட் டச்சால், குறிஞ்சிப்பாடி வாக்காளர்கள் ஒருவித உணர்வு தவிப்பிற்கு ஆளாகியிருக்கின்றனர். இவர்களைத் தாண்டி மற்ற பிற புதிய கட்சிகளும் உரிய வாக்குறுதிகளுடன் களமிறங்கியிருக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT