

துணை முதல்வர் ஓபிஎஸ் போட்டியிடும் போடி தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்வதற்காக அதிமுகவினர் வைத்திருந்த ரூ.1.50 லட்சத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர். இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் குறிஞ்சிமணி. இவர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் போடி அலுவலகம் அருகே உள்ள மாடி வீட்டில் குடியிருந்து வருகிறார். துணை முதல்வர் மற்றும் தேனி எம்.பி. ரவீந்திரநாத்திற்கு உதவியாளராகவும் உள்ளார்.
இவர் வீட்டில் இன்று காலை வருமான வரித் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். மண்டலத் துணை இயக்குநர் பூவலிங்கம் தலைமையிலான குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர். ஆனால், இதில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. துணை முதல்வர் அலுவலகம் அருகே நடந்த இச்சோதனையால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதே நேரத்தில் போடி 11-வது வார்டு திருமலாபுரத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் சித்தரங்கன் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்து கொண்டிருந்தார். மாட்டுமந்தை என்ற இடத்தில் பணம் கொடுத்துக் கொண்டிருந்தபோது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இவரைக் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
தேனி மாவட்டத்தில் அடுத்தடுத்து நடக்கும் வருமான வரி சோதனையால் அதிமுகவினர் கலக்கத்தில் உள்ளனர்.