Published : 03 Apr 2021 03:13 AM
Last Updated : 03 Apr 2021 03:13 AM

பிரதமரை அவதூறாக பேசுவதாக புகார்; உதயநிதி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை ரத்து செய்ய வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாஜக புகார்

சென்னை

பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசியதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாஜக சார்பில் நேற்று புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பாஜக மாநில பொதுச்செயலர் கரு நாகராஜன், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவை நேற்று சந்தித்து அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி, கடந்த மார்ச்31-ம் தேதி தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், ‘‘பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த அழுத்தத்தை சகித்துக்கொள்ள முடியாமல்முன்னாள் மத்திய அமைச்சர்கள் இறந்துவிட்டனர்’’ என பேசியுள்ளார்.

இவ்வாறு அரசியல் ஞானம் இல்லாமல், இழிவாக பேசியது கண்டிக்கத்தக்கது. உதயநிதியின் பேச்சு தேர்தல் நடத்தைவிதிகளுக்கு எதிரானது. எனவே, இந்த தேர்தலில்சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி போட்டியிடும் வாய்ப்பை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும். திமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து உதயநிதியின் பெயரை நீக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது.

கரு.நாகராஜன் வழங்கிய மற்றொரு மனுவில் ஆயிரம் விளக்கு தொகுதியில், பள்ளி ஒன்றில் நடைபெற்ற, வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னங்களை பொருத்தும் பணியின்போது, ஒருவர் சில நிமிடங்களில் சுமார் 15 இயந்திரங்களில் பெயர்,சின்னங்களை பொருத்தியுள்ளார். அதில் திமுகவுக்கு வாக்களித்திருப்பதாகவும் தெரியவருகிறது. எனவேஅந்த பள்ளியில் சின்னங்கள் பொருத்தப்பட்ட இயந்திரங்களை ஆய்வு செய்யவேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x