

பெண்களை அவமரியாதை செய்த திமுக கூட்டணிக்கு பெண்களின் வாக்குகள் கிடைக்காது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி தமாகா வேட்பாளர் எம்.யுவராஜா, மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் ஆகியோரை ஆதரித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகளாக நல்லாட்சி புரிந்த அதிமுக அரசு மீதுமக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். திமுகவின் பொய்ப்பிரச்சாரங்களை மக்கள் இனியும் நம்பத் தயாராக இல்லை. பெண்களை அவமரியாதை செய்த திமுக கூட்டணிக்கு, பெண்களின் வாக்கு கிடைக்காது.
மக்கள் நம்பத் தயாராக இல்லை
அதிமுக தேர்தல் அறிக்கையை மக்கள் நம்புகிறார்கள். திமுக தேர்தல் அறிக்கை மண் குதிரை போன்றது என்பதால், அதனை நம்பி மக்கள் ஆற்றில் இறங்கத் தயாராக இல்லை. பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் என்பது தற்காலிகமானதுதான். இதன் விலையைக் குறைக்க பெட்ரோலிய அமைச்சகம், எண்ணெய் நிறுவனங்களுடன் பேசி நல்ல முடிவை எடுக்கும்.
அதிமுகவுடன் ஆன எங்கள்கூட்டணி பலமான கூட்டணியாகும். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தேர்தல் ஆணையம்அனைவரையும் பாரபட்சமில்லாமல் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது என்றார்.