Published : 03 Apr 2021 03:13 AM
Last Updated : 03 Apr 2021 03:13 AM

தமிழக மக்களிடமே கோயில்களை ஒப்படைக்க வேண்டும்: முதல்வர், எதிர்க்கட்சித் தலைவருக்கு சத்குரு கடிதம்

கோவை

தமிழக மக்களிடமே கோயில்களை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சத்குரு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: 3 கோடிக்கும் மேற்பட்ட தமிழரின் நெஞ்சார்ந்த விருப்பத்தை இதன்மூலம் தெரிவிக்கிறேன். தமிழகத்தின் ஆன்மாவை முழு பொலிவுக்கு மீட்டெடுத்தவராய் நீங்கள் என்றென்றும் நினைவுக் கூரப்பட, பொறுப்புள்ள அரசியல் தலைவர்களாக திராவிட பெருமையின் மையமான கோயில்களை விடுவிக்குமாறு மன்றாடி கேட்கிறேன்.

மக்களின் ஒருங்கிணைந்த குரல் ஒலித்திருக்கிறது. இந்து சமுதாயத்தினர், தனது புனிதமான வழிபாட்டுத் தலத்தை தானே பேணிப் பராமரித்து நிர்வகிக்க, அவர்களுக்கு உண்டான ஜனநாயக உரிமையை அரசு வழங்கவேண்டும், என்று ஒருங்கிணைந்த விதத்தில் குரல் எழுப்பியிருக்கிறார்கள். தமிழக கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இருப்பது குறித்தும், அரசின் கட்டுப்பாட்டில் கோயில்கள் அடைந்துள்ள அவலநிலை குறித்தும் கடந்த சில மாதங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் மனவேதனையை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

ஒரு பிரம்மாண்ட இயக்கம் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது. மூன்று கோடிக்கும் அதிகமானமக்கள் ஒரே குரலில், விலைமதிப்பில்லாத கோயில்களின் அவலநிலை குறித்த தங்களதுஆழமான வேதனையையும் ஆற்றாமையையும் பதிவு செய்துள்ளனர். ஆன்மிகத்துக்கும், கலாச்சாரத்துக்கும் மையப்புள்ளியாய் விளங்கும் கோயில்கள் விடுவிக்கப்பட்டு, பக்தர்களின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டு, கோயில்களை உயிரோட்டமாக்கி அதன் முழு ஆற்றலுக்கு மீண்டும் இயங்கச் செய்யவேண்டும் என்பதே அவர்களின் தீவிர விருப்பமாய் இருக்கிறது.

இத்தகவலை தங்களுக்கு நான் தெரியப்படுத்தும் இவ்வேளையில், மிஸ்டுகால்களும், களத்தில் மக்கள் ஓரிடத்தில் கூடி தெரிவித்த ஆதரவும், சமூக வலைதளப் பக்கங்களிலும், இணையதளத்திலும் மக்கள் தெரிவித்த ஆதரவுகள் மட்டுமே கணக்கெடுக்கக்கூடிய வகையில் இருப்பதால், அவற்றை மட்டுமே தங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

மக்களின் பிரதிநிதியாய் செயலாற்றி சேவை வாழ்வில் ஈடுபட்டுள்ள தாங்கள், மக்கள் விடுத்திருக்கும் இக்கோரிக்கையை புறக்கணிக்கவோ, கோரிக்கைக்கு செவிமடுக்காமலோ இருக்க இயலாது என்பது என் எண்ணம்.

அதனால், தங்களது தலைமையின் கீழ், தமிழ் மக்களிடமே தமிழக கோயில்களை ஒப்படைக்க வேண்டிய உறுதிமொழியினை இச்சூழ்நிலையில் மிக அவசரமாக தாங்கள் வழங்கிட வேண்டுமென்றும், அதன்மூலம் திராவிடத்தின் பெருமைக்குரியவராய், வரலாற்றில் பொறிக்கப்படும் பெருமையையும் பெற்றவராய் தாங்கள் நினைவு கொள்ளப்படுவீர்கள் என்பதும் நிச்சயம்.

இவ்வாறு சத்குரு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x