Published : 02 Apr 2021 06:12 PM
Last Updated : 02 Apr 2021 06:12 PM

வருமான வரித்துறை அமைச்சர்கள் வீட்டுக்கு செல்லாதது ஏன்?- திமுக எம்.பி. அண்ணாதுரை கேள்வி

திருவண்ணாமலை அடுத்த தேவனாம்பட்டு கிராமத்தில் உள்ள திமுக எம்பி அண்ணாதுரை வீட்டில் சோதனை நடத்திவிட்டு வெளியே வந்த வருமான வரித்துறையினர்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை திமுக எம்.பி. சி.என்.அண்ணாதுரையின் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பணம் மற்றும் பொருள் கைப்பற்றப்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருப்பவர் தொழிலதிபர் சி.என்.அண்ணாதுரை. மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் தீவிர ஆதரவாளரான இவர், கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர்களின் முக்கிய நபராக உள்ளார்.

இவரது பூர்வீக வீடு, திருவண்ணாமலை அடுத்த தேவனாம்பட்டு கிராமத்தில் உள்ளது. அந்த வீட்டில் இருந்து, கலசப்பாக்கம் தொகுதி மக்களுக்கு வழங்க, பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சந்தீப் நந்தூரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக, பறக்கும் படையில் வெள்ளிக்கிழமை காலை சோதனை நடத்தினர். வீடு அமைந்துள்ள பகுதியின் சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி, சோதனை நடத்தப்பட்டுள்ளத. அப்போது பணம் ஏதும் சிக்காததால், அவர்கள் திரும்பினர்.

இதைத்தொடர்ந்து 10 பேர் அடங்கிய வருமான வரித்துறையினர், திமுக எம்பி சி.என்.அண்ணாதுரையின் வீட்டில் அதிரடியாக நுழைந்தனர். பின்னர் அவர்கள், அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தி உள்ளனர். மேலும் வீட்டில் இருந்த சி.என்.அண்ணாதுரை மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். அவர்களது சோதனையில் பணம் ஏதும் சிக்கவில்லை என கூறப்படுகிறது. அதேபோல், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக தெரியவில்லை. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற சோதனைக்கு பிறகு, வெறுங்கையுடன் வருமான வரித்துறையினர் திரும்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமைச்சர்கள் வீட்டுக்கு செல்லாதது ஏன்?

இந்த நிலையில், வருமான வரித்துறை சோதனை குறித்து திமுக எம்.பி. சி.என்.அண்ணாதுரை கூறும்போது, “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி, 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவது உறுதி என கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது. இதனை தாங்கி கொள்ள முடியாமல், பாஜக – அதிமுக கூட்டணியின் தோல்வி பயத்தால் திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் வீடு மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் வீடுகளில், மத்திய அரசின் ஏவல் துறையாக மாறிய வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்.

இதேபோல், திருவண்ணாமலையில் திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த மாதம் 25-ம் தேதி பிரச்சாரம் செய்தபோது, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஆனால் எதையும் கைப்பற்றவில்லை. எனது வீட்டில் நடைபெற்ற சோதனையிலும், பணம் மற்றும் பொருட்கள் ஏதும் கைப்பற்றவில்லை. இதுபோன்ற பழிவாங்கும் செயல்களால் திமுக கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது.

சோதனைக்கு பிறகுதான், எங்களது தேர்தல் பணி வேகமெடுக்க உள்ளது. வெற்றிக்காக நாங்கள் பணியாற்றுவோம். திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராவதை எத்தனை பாஜக மற்றும் அதிமுக வந்தாலும் தடுக்க முடியாது. மடியில் கனம் இல்லாததால், எங்களுக்கு வழியில் பயமில்லை. 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து குவித்துள்ள அதிமுக அமைச்சர்கள் வீட்டில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தவில்லை” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x