தமிழகத்தின் புதிய 11 மருத்துவக் கல்லூரிகள்: விதிகளுக்கு உட்பட்டு கட்டப்படுகிறதா?- ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தின் புதிய 11 மருத்துவக் கல்லூரிகள்: விதிகளுக்கு உட்பட்டு கட்டப்படுகிறதா?- ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

தமிழகத்தில் புதிதாகக் கட்டப்படும் 11 மருத்துவக் கல்லூரிகள் விதிகளுக்கு உட்பட்டு கட்டப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டுமென தேசிய மருத்துவ ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் 75 மருத்துவக் கல்லூரிகளைக் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 11 கல்லூரிகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி புதிய மருத்துவக் கல்லூரிகளை மருத்துவ கவுன்சில் விதிகளின்படி கட்ட வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, ராஜசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''மனுதாரர் 2010ஆம் ஆண்டைய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி மருத்துவக் கல்லூரிகளைக் கட்டக் கோரியுள்ளார். தற்போது மருத்துவ கவுன்சில் தேசிய மருத்துவ ஆணையமாக மாற்றப்பட்டு, 2018 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகள் கட்டுவதற்கான புதிய விதிகளை வகுத்துள்ளன. அதன் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன'' என்று தெரிவித்தார்.

அரசுத் தரப்பு வாதத்தைப் பதிவு செய்த நீதிபதிகள், ''தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி மருத்துவக் கல்லூரிகளைக் கட்ட வேண்டும். புதிய விதிகளின்படி மருத்துவக் கல்லூரிகளின் கட்டுமானங்கள் அமைந்துள்ளதா? என தேசிய மருத்துவ ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும். இந்தக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு அனுமதி கோரி, தேசிய மருத்துவ ஆணையத்துக்கு விரைவில் விண்ணப்பிக்க வேண்டும்'' எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in