Last Updated : 02 Apr, 2021 11:39 AM

 

Published : 02 Apr 2021 11:39 AM
Last Updated : 02 Apr 2021 11:39 AM

பெண்களுக்காக இன்று கரோனா தடுப்பூசி முகாம்: முதல் ஊசி போட்டுக்கொண்ட புதுவை ஆளுநர்

பெண்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமை ராஜீவ்காந்தி அரசு மகளிர் மருத்துவமனையில் இன்று தொடங்கி வைத்து முதல் ஊசியை ஆளுநர் தமிழிசை போட்டுக்கொண்டார்.

புதுச்சேரியில் ராஜீவ்காந்தி அரசு மகளிர் மருத்துவமனையில் பெண்களுக்கான தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது. தடுப்பூசியை ஆளுநர் தமிழிசை முதலில் போட்டுக்கொண்டு முகாமைத் தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து ஆளுநர் தமிழிசை கூறுகையில், "கரோனாவிலிருந்து முதல் பாதுகாப்பு முகக் கவசம். தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்வோரும், பிரச்சாரத்தைக் கேட்க வருவோரும், வாக்களிக்க உள்ளோரும் முகக்கவசம் அணியுங்கள். வாக்களியுங்கள் என்று கேட்பதற்கு முன்பு முகக்கவசம் போடுங்கள் என்று கேட்கிறேன். பாதுகாப்புக்கு முகக்கவசம் போடுங்கள்.

தற்போது புதுச்சேரியில் ஊரடங்கு நடைமுறைப்படுத்த வேண்டிய நிகழ்வு ஏதும் இல்லை. அதுபோன்ற நிகழ்வு வரக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்துகிறோம். கடையடைப்பு, தனிமைப்படுத்துதல் போன்ற அபாயகரமான கட்டத்தை மீண்டும் சந்தித்துவிடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளோம்.

தற்போது தொற்று அதிகரிக்க முக்கியக் காரணம், நெருக்கமான இடத்தில் முகக்கவசம் அணியாமல் இருப்பதுதான். 50 சதவீதத் தொற்றை முகக்கவசம் அணிவதால் குறைக்கலாம்.

"வாக்களியுங்கள் என்பதுபோல் முகக்கவசம் போடுங்கள்" என்று பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளோம். முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் போடவேண்டிய அவசியமில்லை. அபராதம் போட்டுதான் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற நிலை வரக்கூடாது. நாமே முன்வந்து உணர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும். போலீஸார் கூட்டம் கூடும் இடத்தில் முகக்கவசம் அணிய வலியுறுத்துவார்கள்.

பிரச்சாரக் கூட்டத்துக்கு முகக்கவசம் அணிந்து செல்லுங்கள். தேவையான அளவு தடுப்பூசி இருக்கிறது. தட்டுப்பாடு இல்லை" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x