

மதுரையில் மீண்டும் கரோனா வேகமாகப் பரவுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ‘மருந்துப் பெட்டகம்’ வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கரோனாவுக்கு முதல் உயிரிழப்பு மதுரையில்தான் ஏற்பட்டது. அதனால், மதுரையில் கடந்த ஆண்டு இந்த நோய் பரவிய ஆரம்பத்தில் பெரும் அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டது.
மாநகராட்சி, இந்தத் தொற்று நோய் பரவுவதைத் தடுக்க பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் பொடி, வைட்டமின் மாத்திரைகள், ஜிங் மாத்திரைகள், மற்றும் ஹோமியோபதி ஆர்சனிகா ஆல்பம்-30 மருந்துகள் ஏற்ககெனவே இலவசமாக வழங்கியது.
மேலும், மதுரையில் கரோனாவைக் கட்டுப்படுத்த, நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொண்ட மருந்துப் பெட்டகத்தை வழங்கும் திட்டம் தொடங்கியது.
குடிசைப்பகுதி மக்களுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு ரூ.100க்கும் இந்த மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது. இது நோய் பரவுதைத் தடுப்பதில் மாநகராட்சிக்கு கை மேல் பலன் கிடைத்தது.
இந்த மருந்து பெட்டகத்தில், நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கும் சித்தா, அலோபதி, ஹோமியோபதி மருந்துகள் வழங்கப்பட்டது. அதன்பின் கரோனா கட்டுக்குள் வந்ததால் மாநகராட்சியில் இந்த மருந்துப் பெட்டகம் விநியோகம் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது மதுரையில் கரோனா வேகமாக பரவுவதால் மீண்டும் மாநகராட்சி நிர்வாகம், மீண்டும் மருந்துப் பெட்டகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.