Published : 02 Apr 2021 03:12 AM
Last Updated : 02 Apr 2021 03:12 AM

27 மாவட்டங்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கும்: வழக்கத்தைவிட 11 டிகிரி வரை உயர வாய்ப்பு

தமிழகத்தில் 27 மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு வழக்கத்தைவிட 11 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வடமேற்கு திசையில் இருந்து தமிழக பகுதி நோக்கி தரைக்காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக ஏப்ரல் 4-ம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 11 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக் கூடும்.

ஏப்ரல் 5 முதல் 7-ம் தேதி வரை கரூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 9 டிகிரி, ஃபாரன்ஹீட் வரையும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரையும் உயரக் கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை பதிவாகக் கூடும்.

வெப்பநிலை உயர்வு காரணமாக ஒருசில இடங்களில் அனல்காற்று வீசும். பொதுமக்கள், விவசாயிகள், தேர்தல் வேட்பாளர்கள், போக்குவரத்து காவலர்கள் பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வது மற்றும் ஊர்வலம் செல்வது போன்றவற்றை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஏப்ரல் 5-ம் தேதி ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும்.

மத்திய அந்தமான் கடல் பகுதியில் தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தப் பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக அந்தமான் கடல் பகுதியில் 40முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக் கூடும். எனவே அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x