Published : 02 Apr 2021 03:13 AM
Last Updated : 02 Apr 2021 03:13 AM

சென்னையில் ஸ்டாலின் தீவிர பிரச்சாரம்: வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்

சென்னை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் நேற்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். மாலை 5 மணிக்குத் தொடங்கி இரவு 8.15 மணிவரை, 3 மணி நேரத்துக்கும் மேலாக வீதி, வீதியாகச் சென்று பொதுமக்களை சந்தித்து, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதைத் தொடர்ந்து, திமுக வேட்பாளர்கள் எழிலன் (ஆயிரம் விளக்கு), ஜெ.கருணாநிதி (தி.நகர்), த.வேலு (மயிலாப்பூர்) ஆகியோரை ஆதரித்து சென்னை மயிலாப்பூரில் வாக்கு சேகரித்தார்.அப்போது பொதுமக்கள் மத்தியில் ஸ்டாலின் பேசியதாவது: நான் சென்னை மேயராக இருந்தபோது எதுவுமே செய்யவில்லை என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். ஆனால், எனது நிர்வாகத்தில் மாநகராட்சிப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டன. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 10 மேம்பாலங்கள் கட்டப்பட்டன.

திடக்கழிவு மேலாண்மை, மழைநீர் வடிகால்கள் என பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி, சிங்காரச் சென்னையாக வைத்திருந்தேன். ஆனால், கடந்த 10ஆண்டுகால ஆட்சியில் சென்னையை சீரழித்துவிட்டதுதான், அதிமுகவின் சாதனையாகும்.

முதல்வர் பழனிசாமி நான்சொல்வதைத்தான் அறிவிப்புகளாக வெளியிடுவார். அதற்கு, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து,விவசாயக் கடன், நகைக் கடன்ரத்து உள்ளிட்ட சில அறிவிப்புகள் உதாரணமாகும்.

தற்போது அதிமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை எல்லாம் தெரிவித்து வருகின்றனர். இந்த தேர்தலில் அதிமுக ஓரிடத்தில்கூட வெற்றி பெறக்கூடாது. மக்களின் எழுச்சியைக் காணும்போது 234தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x