வன்னியர் உள் ஒதுக்கீட்டுக்கு எதிரான மேலும் ஒரு வழக்கு சென்னைக்கு மாற்றம்

வன்னியர் உள் ஒதுக்கீட்டுக்கு எதிரான மேலும் ஒரு வழக்கு சென்னைக்கு மாற்றம்
Updated on
1 min read

வன்னியர்கள் உள் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மேலும் ஒரு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தை சேர்ந்த அமர்நாத், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்துக்கு தமிழக ஆளுனரும் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதால் அதே பட்டியலில் உள்ள பிற பிரிவினர்கள் பாதிக்கப்படுவர்.

சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். எனவே, வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்யவும், இடஒதுக்கீடு அடிப்படையில் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் வழங்க தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஏற்கெனவே வன்னியர்கள் உள் இடஒதுக்கீட்டுக்கு எதிராக 6 மனுக்கள் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டு, அந்த மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in