Published : 01 Apr 2021 03:15 AM
Last Updated : 01 Apr 2021 03:15 AM
சட்டப்பேரவை தேர்தலையொட்டி, மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க வசதியாக சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சட்டப்பேரவை தேர்தலில் 100சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்யும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் இன்றுமுதல் 5-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, “சட்டப் பேரவை தேர்தலையொட்டி இன்று (ஏப்.1) முதல் 5-ம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2,225 பேருந்துகளுடன், சிறப்பு பேருந்துகளாக 3,090 என மொத்தம் 14,215 பேருந்துகளை இயக்கவுள்ளோம்.
கோவை, திருப்பூர், சேலம், பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2,644 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கூட்ட நெரிசலைக் குறைத்து, சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வரும் 4, 5-ம் தேதிகளில் மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் பேருந்து நிலையங்கள், தாம்பரம் ரயில்நிலையம் அருகே என பேருந்துகளை பிரித்து இயக்கவுள்ளோம்.
சொந்த ஊர்களுக்குச் சென்றமக்கள் திரும்பி வரும் வகையில் வரும் 7-ம் தேதி முதல் போதிய அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பேருந்துகளை இயக்கவுள்ளோம். நீண்ட தூரம் செல்லும் பொது மக்கள் www.tnstc.in. என்ற இணையதளம் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT