Published : 01 Apr 2021 03:15 AM
Last Updated : 01 Apr 2021 03:15 AM

மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று அரவக்குறிச்சியில் பிரச்சாரம்

பிரதமர் மோடியைத் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்துக்காக புதுச்சேரிக்கு இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிறார். தொடர்ந்து அவர் திருக்கோவிலூர் பிரச்சாரப் பொதுக் கூட்டத்திலும் பங்கேற்கவுள்ளார்.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இக்கூட்டணியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர்கள் நிதின்கட்கரி, நிர்மலா சீதாராமன் ஆகியோர் கடந்த வாரங்களில் பிரச்சாரப் பொதுக் கூட்டங்களில் பங்கேற்றனர். பல மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து பாஜக போட்டியிடும் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வருகை தந்து, பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார பொதுக் கூட்டத்தில்உரையாற்றினார்.

பிரதமரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று புதுச்சேரி வருகிறார். சென்னையிலில் இருந்து இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் அவர் புதுச்சேரி வருகிறார். காலை 10 மணிக்கு கருவடிக்குப்பம் சித்தானந்தா கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்கிறார். காலை 10.30 மணிக்கு லாஸ்பேட்டை தொகுதியில் சுபாஷ் சந்திர போஸ் சிலை முதல் சிவாஜி சிலை வரை ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலையில் பேரணியாகச் சென்று, பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.

அதைத் தொடர்ந்து திருக்கோவிலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு செல்கிறார். அங்கு அவர், பாஜக வேட்பாளர் விஏடி.கலிவரதனுக்கு ஆதரவாக பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

மேலும் திருக்கோவிலூர் செல்லும் அமித் ஷா அங்கிருந்து, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சிக்குச் சென்று பாஜக துணைத் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x