Published : 31 Mar 2021 06:04 PM
Last Updated : 31 Mar 2021 06:04 PM

வன்னியர் இட ஒதுக்கீடு: அவரவர்க்கு அவரவர் கவலை; பாஜக என்ன சொல்லப் போகிறது?- ப.சிதம்பரம்

வன்னியர்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள விவகாரத்தில் அவரவர்க்கு அவரவர் கவலை என்று தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஒதுக்கீடு என்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாத பாஜக என்ன சொல்லப் போகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் வன்னியர்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% தனி இட ஒதுக்கீடு கோரி, பாமக மற்றும் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த அமைப்பினர், பலகட்டப் போராட்டங்களை நடத்தி வந்தனர். பாமக நிறுவனர் ராமதாஸ் இக்கோரிக்கை குறித்துத் தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதையடுத்து தமிழக சட்டப்பேரவையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில், பிப். 26-ம் தேதி வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டு முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், மிக பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இட ஒதுக்கீட்டில், 'எம்பிசி-வி' என்ற புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டு, வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள சீர்மரபினருக்கு 7% உள் ஒதுக்கீடு வழங்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது. 20% இட ஒதுக்கீட்டில் மீதம் உள்ள 2.5% மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள மற்ற சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீடு ஆகும்.

தமிழகத்தில் சாதிவாரியான புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் தமிழக அரசு ஆணையம் அமைத்துள்ளது. அதன் அறிக்கை இன்னும் வெளியாகாத நிலையில், இந்த இட ஒதுக்கீடு தற்காலிகமானது எனவும், 6 மாதத்திற்குப் பின்னர் சாதிவாரியான புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இட ஒதுக்கீடு மாற்றியமைக்கப்படும் எனவும், சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

இதற்கிடையே, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு ஆறு மாதங்களுக்கு மட்டுமே என்று பேசியது விவாதத்தைக் கிளப்பியது. அவரைத் தொடர்ந்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உள் ஒதுக்கீடு தற்காலிகமானதுதான் என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, ''வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் நிரந்தரமானது. அதை நீக்க முடியாது. சட்டப்பேரவையில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டால் அது நிரந்தரமான சட்டம்தான். சட்டத்தில் தற்காலிக சட்டம் என்று ஒன்று கிடையாது'' என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ப.சிதம்பரம் தன் ட்விட்டர் பக்கத்தில், ''10.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு தற்காலிகமானது என்று துணை முதல்வர் கூறுகிறார். அவருக்குத் தென் மாவட்டங்களின் கவலை!

இல்லையில்லை, 10.5 சதவிகிதம் நிரந்தரமானது என்று சட்ட அமைச்சர் கூறுகிறார். அவருடைய கவலை அவருக்கு! இதில் முதல்வர் என்ன சொல்லப்போகிறார்?

எல்லாவற்றுக்கும் மேலாக ‘ஒதுக்கீடு’ என்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாத பாஜக என்ன சொல்லப் போகிறது?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x