Last Updated : 31 Mar, 2021 05:31 PM

 

Published : 31 Mar 2021 05:31 PM
Last Updated : 31 Mar 2021 05:31 PM

பறக்கும் படை அதிகாரியை மிரட்டிய வழக்கில் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு முன்ஜாமீன்

தேர்தல் பறக்கும் படை அதிகாரியை மிரட்டிய வழக்கில் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு நிபந்தனையற்ற முன்ஜாமீன் வழங்கப்பட்டது.

தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ, கோவில்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி விலக்கு அருகே மார்ச் 12-ல் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.

அந்த வழியாக வந்த கடம்பூர் ராஜூ வாகனத்தையும் பறக்கும் படையினர் சோதனைக்காக நிறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பறக்கும் படை குழுத் தலைவரை அமைச்சர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரியை மிரட்டியதாக கடம்பூர் ராஜூ மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு, அவர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், என் மீது தவறாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கு எண்ணிக்கைக்காகவும், என் மீது அவதூறு பரப்பும் நோக்கத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, முன்ஜாமீன் வழங்க வேண்டும் என அமைச்சர் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் உள்நோக்கத்துடன் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அரசுத் தரப்பில் முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிக்கவில்லை. தேர்தல் நேரமாக இருப்பதால் முன்ஜாமீன் வழங்க நிபந்தனைகள் விதிக்கவும் தேவையில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, இந்திய தண்டனைச் சட்டம் 506 பிரிவின் கீழ் பதிவு செய்யப்படும் அனைத்து வழக்குகளிலும் இதே நிலைப்பாடு பின்பற்றப்படுமா? என அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு நிபந்தனையற்ற முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x