Published : 31 Mar 2021 04:19 PM
Last Updated : 31 Mar 2021 04:19 PM

காங்கிரஸ் சூரியனை அஸ்தமனமாக்கி வருகிறது: ராஜ்நாத் சிங் விமர்சனம்

திமுக- காங்கிரஸ் கூட்டணி கெமிஸ்ட்ரி இல்லாதது. காங்கிரஸ் சூரியனை அஸ்தமனமாக்கி வருகிறது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் பாஜக வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

"தமிழ் மொழி தொன்மையான மொழி. உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி. தமிழகம் வளர்ச்சி பெற வேண்டிய மாநிலம். எனவே, தமிழகத்தில் அதிமுக வெற்றி பெற்றால், மத்தியில் பாஜக அரசுடன் இணக்கமாகச் செயல்பட்டு பல்வேறு நலத்திட்டங்களையும், மாநில வளர்ச்சிக்கு உதவ முடியும்.

கரோனா காலகட்டத்தில் பிரதமர் மோடி சிறப்பாகச் செயல்பட்டார். இந்தியாவின் செயல்பாடுகளை உலகத் தலைவர்களே பாராட்டினர். இந்தியாவில் கரோனாவைத் தடுக்கும் தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தனர். இந்த மருந்துகள் 72 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், கரோனா காலத்தில் பாதுகாப்புக் கவச உடைகள் உட்பட பல்வேறு உபகரணங்கள் அதிக அளவு உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது.

திமுகவின் முக்கியத் தலைவர் ஒருவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரை விமர்சித்ததை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழக முதல்வரின் தாயைப் பற்றி விமர்சித்தது தமிழகப் பெண்களை விமர்சிப்பதற்கு ஒப்பாகும்.

தமிழகத்தில் வேலையின்றி இளைஞர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களை வேலை தேடுபவர்களாக அல்லாமல் வேலை வழங்குபவர்களாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் 50 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள். விவசாயிகளுக்காக நாடாளுமன்றத்தில் 3 சட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம். இதனால் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்.

விவசாயிகள் போலவே மீனவர்களுக்கும் வருடத்திற்க்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். யாழ்ப்பாணம் சென்ற ஒரே இந்தியப் பிரதமர் மோடி. இலங்கையில் போரில் வீடு இழந்தவர்களுக்கு 26 ஆயிரம் வீடுகளை வழங்கினார். இந்தியாவில் மோடி சிறப்பான ஆட்சியை வழங்கி வருகிறார்.

கரோனா காலத்தின்போது ஏற்பட்ட பொருளாதாரச் சரிவில் இருந்து இந்தியா மீண்டு வருகிறது. இதன் காரணமாக பங்குச்சந்தை, ஜல்லிக்கட்டு காளை போன்று உயர்ந்து வருகிறது. ராணுவத் தளவாட உற்பத்தி மையங்கள் வட இந்தியாவில் உத்தரப் பிரதேசத்திலும், தென்னிந்தியாவில் தமிழகத்திலும் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ளன.

முந்தைய காலத்தில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தின் வளர்ச்சிக்காக எந்த ஒரு உதவியையும் செய்யவில்லை. காங்கிரஸ் அரசு 5-வது நிதிக்குழுவில் ரூ.90 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கிய நிலையில், பாஜக அரசு 12-வது நிதிக்குழுவில் ரூ.5.24 லட்சம் கோடி தமிழகத்துக்கு வழங்கியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாஜ்பாயை பிரதமராக்க ஒத்துழைப்பு வழங்கினார். இதனை பாஜக என்றும் மறக்காது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் வழியில் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் உயர பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

திமுக- காங்கிரஸ் கூட்டணி கெமிஸ்ட்ரி இல்லாதது. காங்கிரஸ் சூரியனை அஸ்தமனமாக்கி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலான பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூ.30 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலா நகரமான உதகையின் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். உதகையில் உள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக ஹெச்பிஎஃப் தொழிற்சாலையை தொழில்நுட்பப் பூங்காவாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்".

இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x