Last Updated : 31 Mar, 2021 02:44 PM

 

Published : 31 Mar 2021 02:44 PM
Last Updated : 31 Mar 2021 02:44 PM

மோடியைத் தொடர்ந்து அமித் ஷா நாளை புதுச்சேரி வருகை 

புதுச்சேரி

பிரதமர் மோடியை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்துக்கு புதுச்சேரிக்கு நாளை உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிறார்.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இக்கூட்டணியில் பாஜகவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் ஆகியோர் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றனர். பல மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து பாஜக தொகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் நேற்று பங்கேற்று டெல்லி திரும்பினார். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை புதுச்சேரி வருகிறார்.

டெல்லியிலிருந்து விமானம் மூலம் இன்று சென்னை வந்து இரவு நட்சத்திர விடுதியில் தங்குகிறார். அதைத்தொடர்ந்து நாளை காலை ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி வருகிறார். காலை 10 மணிக்கு கருவடிக்குப்பம் சித்தானந்தா கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்கிறார். அதையடுத்து காலை 10.30 மணிக்கு லாஸ்பேட்டை தொகுதியில் சுபாஷ் சந்திரபோஸ் சிலை முதல் சிவாஜி சிலை வரை ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குச் சாலையில் பேரணியாகச் சென்று பிரச்சாரத்தில் அமித் ஷா ஈடுபட உள்ளார்.

அதைத்தொடர்ந்து திருக்கோயிலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க லாஸ்பேட்டை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் செல்கிறார்.

இதையடுத்து லாஸ்பேட்டை, கருவடிக்குப்பம், சித்தானந்தா கோயில் ஆகிய பகுதிகளில் போலீஸார், துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணிகளை இன்று தொடங்கியுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் வருகையால் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் உயரதிகாரிகள் துரிதப்படுத்தியுள்ளனர். போக்குவரத்து மாற்றத்தையும் இப்பகுதியில் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x