Last Updated : 31 Mar, 2021 01:38 PM

 

Published : 31 Mar 2021 01:38 PM
Last Updated : 31 Mar 2021 01:38 PM

கோவை வந்தார் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்: விநாயகர் கோயிலில் சாமி தரிசனம்

கோவை புலியகுளம் விநாயகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் பிரச்சாரத்தைத் தொடங்கிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் | படம்: ஜெ.மனோகரன்.

 கோவை 

பாஜக வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவை வந்தார். தொடர்ந்து புலியகுளம் விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கோவை தெற்கு தொகுதியில் பாஜகவின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். பிரதானமாக, திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மயூரா எஸ்.ஜெயக்குமார், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுடன் வானதி மோதுகிறார். இவரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்து, வாக்குச் சேகரிக்க உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று கோவை வந்தார்.

நண்பகல் 12 மணிக்குக் கோவை விமான நிலையத்துக்கு வந்த அவரைக் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து, புலியகுளத்துக்கு வந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், புலியகுளம் விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது வேட்பாளர் வானதி சீனிவாசன் உடன் இருந்தார்.

அதைத் தொடர்ந்து புலியகுளத்தில் கட்சி நிர்வாகிகள் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதல்வர் யோகி ஆதித்யநாத், அங்கிருந்து ஊர்வலமாகப் பிரச்சாரக் கூட்டம் நடக்கும் தேர்முட்டிப் பகுதிக்கு வந்தார். சிறிது நேரத்தில் அவர் உரையாற்ற உள்ளார்.

முன்னதாக, பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட தமிழக பாஜக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரதமர் மோடி நேற்று தாராபுரத்தில் பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x