Published : 31 Mar 2021 01:30 PM
Last Updated : 31 Mar 2021 01:30 PM

ஏப்.30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

ஏப்.30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சூழலுக்கு ஏற்ப கரோனா கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் விதித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ நிபுணர்கள் குழு, பொது சுகாதாரத்துறை, மத்திய அரசு ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மாதந்தோறும் நீட்டித்து வருகிறது. இறுதியாக, மார்ச் 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மார்ச் மாதத் தொடக்கம் முதலே தமிழகத்தில் கரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது. சென்னை, கோவை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று (மார்ச் 30) மட்டும் 2,342 பேருக்கு தமிழகம் முழுவதும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 16 பேர் கரோனா தொற்றுக்கு நேற்று உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 874 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 242 பேருக்கும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 207 பேருக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 114 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 பேருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஏப். 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மார்ச் 31) பிறப்பித்த அறிவிப்பில், கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஏப்.30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூழலுக்கு ஏற்ப கரோனா கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் விதித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்த விமானப் பயணங்கள் தவிர மற்ற அனைத்து சர்வதேச விமானப் பயணங்களுக்கும் தடை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கரோனா பரிசோதனை - கண்காணிப்பு - சிகிச்சை தொடர வேண்டும் எனவும், நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஏற்கெனவே வகுத்து அளிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x