Published : 31 Mar 2021 03:15 AM
Last Updated : 31 Mar 2021 03:15 AM
தமிழகத்தில் 12 நகரங்களில் நேற்று100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் வடமேற்கு திசையில் இருந்து தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏப்ரல் முதல் வாரத்தில் வெப்பம் அதிகரிக்கும்என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இந்நிலையில் நேற்றே 12 நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது.
சென்னையில் 106 டிகிரி
அதிகபட்சமாக சென்னை விமான நிலையம் மற்றும் வேலூர், திருத்தணி ஆகிய இடங்களில் தலா 106 டிகிரி, திருச்சி, மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில் தலா 105, கரூர் பரமத்தியில்104, சேலத்தில் 103, தருமபுரி, நாமக்கல் ஆகிய இடங்களில் தலா 102, சென்னை நுங்கம்பாக்கம்,மதுரையில் 101, புதுச்சேரியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வழக்கத்தை விட 5 டிகிரி அதிக வெயில் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள்
இதற்கிடையே, வங்கக் கடல்மற்றும் அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாகஉள்ளதாகவும், ஆனால் இவற்றால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் 30-ம் தேதி முதல் ஏப்.3-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளது. ஏப்.2, 3 தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரவாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்நா.புவியரசன் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT