

அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை சுவர் விளம்பரத்தில் மோடி பெயர் அழிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்திக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவர் கே.சிவசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளராக அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக எழுதப்பட்ட சுவர் விளம்பரம் ஒன்றில், தாமரை சின்னம் வரையப்பட்டு, அதன் அருகில் இதயதெய்வம் அம்மா அவர்களின் நல்லாசி பெற்ற, பிரதமர் மோடி அவர்களின் ஆசி பெற்ற கே.அண்ணாமலைக்கு தாமரை சின்னத்தில் வாக்களிப்பீர் என உள்ளது.
இதில் பிரதமர் மோடியின் ஆசி பெற்ற என்ற வார்த்தை மட்டும் அழிக்கப்பட்டுள்ளது. ‘மோடி பெயரைச் சொன்னால் வாக்குகள் கிடைக்காது என்பதால், அவரது பெயரை பாஜகவினரே அழித்துவிட்டனர்’ என சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்டத்தலைவர் கே.சிவசாமியிடம் கேட்டபோது, ‘‘அரவக்குறிச்சி தொகுதியில் இப்படிப்பட்ட சுவர் விளம்பரம் எங்கும் இல்லை. பாஜகவின் வெற்றியைத் தடுப்பதற்காக சிலர் இது போன்ற போலியான படங்களை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்’’ என்றார்.