

அதிமுக ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும் என்று மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் கூறினார்.
விருதுநகர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஜி.பாண்டுரங்கனை ஆதரித்து வாக்குச் சேகரிக்க வந்த மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: இத்தேர்தல் தனித்தன்மை வாய்ந்த தேர்தல். ஜெயலலிதா, கருணாநிதி போன்ற ஆளுமைகள் இல்லாத தேர்தல். மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 11 ஆயிரம் குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளன.
2022 முடிவதற்குள் நாட்டில் உள்ள அனைவருக்கும் வீடு என்ற லட்சியத்துடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. 2024-ல் இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் தரமான குடிநீர் வழங்கும் திட்டமும் நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். தொழில்முனைவோரின் கூடாரமாக தமிழகத்தை மாற்றுவோம். புதிய தொழில் தொடங்க பல தளர்வுகளை அறிவிப்போம்.
பட்டியல் இன மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தை முறையாக திரும்பப் பெற்று பயனாளி களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும். இத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். அதில் பாஜக அங்கம் வகிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.