ஏப்.4-ம் தேதிக்குப் பிறகு சமூக ஊடகங்களில் பிரச்சாரத்துக்குத் தடை விதிக்கக் கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

ஏப்.4-ம் தேதிக்குப் பிறகு சமூக ஊடகங்களில் பிரச்சாரத்துக்குத் தடை விதிக்கக் கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

Published on

வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன் எஸ்எம்எஸ், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் தேர்தல் விளம்பரங்கள் வெளியிடத் தடை விதிக்கக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகேஸ்பாபு என்பவர் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய அரசியல் கட்சிகளின் சட்ட விரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் உத்தரவுகளைப் பிறப்பிக்க மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குறுகிய கால அவகாசத்தில் வாக்காளர்களை எளிதில் அணுகும் வகையில் எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த சமூக ஊடகங்கள் மூலமாக பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருவதால், வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன் எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரங்கள் வெளியிட அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, நீதிமன்றத்துக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in