Published : 30 Mar 2021 07:39 PM
Last Updated : 30 Mar 2021 07:39 PM

தமிழக மீனவர்களின் 6 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் பயன்படுத்த அனுமதி: உரிமையாளர்கள் ஆஜராகாததால் நடவடிக்கை

கோப்புப்படம்: அரசுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள்

ராமேசுவரம்

படகின் உரிமையாளர்கள் ஆவணங்களுடன் ஆஜராகாததால் அரசுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 6 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் பயன்படுத்த அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகள், படகு மூலம் மீன்பிடிக்கும் உள்நாட்டு மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவதுபோல, இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கும் வெளிநாட்டு படகுகளுக்கும் தண்டனை மற்றும் அபராதம் விதிப்பதற்கான சட்டம் இலங்கை மீன்வளத் துறையின் மூலம் கடந்த ஜனவரி 24, 2018 அன்று இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு பின்னர் இலங்கை கடற்படையினரால் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 150க்கும் படகுகளை கைப்பற்றி 900க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

மீனவர்களின் போராட்டங்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளினால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும் என்ற நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்படுகின்றனர்.

ஆனால், படகினை விடுவிப்பதற்கு அதன் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் வழக்கு நடைபெறும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜரானால் படகுகளும் விடுவிக்கப்படுகின்றன. ஆனால் படகின் உரிமையாளர்கள் ஆஜராகவில்லை என்றால் படகுகள் அரசுடமையாக்கப்படுகிறது.

இவ்வாறு சிறைப்பிடிக்கப்பட்ட மற்றும் அரசுடமையாக்கப்பட்ட படகுகள் யாழ்ப்பாணம் மாவட்டம் காரைநகர், கிளிநோச்சி மாவட்டம் கிராஞ்சி ஆகிய மீன்பிடி இறங்குதளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்த மீன்பிடி இறங்குதளங்களை பயன்படுத்தி வந்த இலங்கை மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் தமிழக மீனவர்களின் படகுகள் ஆண்டுக்கணக்காக ஒரே இடத்தில் மீன்பிடி இறங்குதளங்களில் நிறுத்தப்பட்டுள்ளதால் கடற்கரை மாசடைவதுடன் இலங்கை மீனவர்களின் தொழில் பாதிக்கப்பட்டுவதாகவும் புகார் எழுந்ததால் மன்னார் மற்றும் ஊர்காவல்துறை நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வந்தன.

வழக்கில் சேதடைந்த தமிழக 121 விசைப்படகுகளை அழிப்பதற்கு அல்லது ஏலத்தில் விடுவதற்கான நீதிமன்றங்கள் கடந்த ஆண்டு உத்திரவிட்டன.

இந்நிலையில் அரசுடமையாக்கப்பட்டு நல்ல நிலையில் உள்ள 6 விசைப்படகுகளை பயன்படுத்த இலங்கை கடற்படை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் எழுத்து பூர்வமாக கடந்த மார்ச் 13 அன்று அனுமதி கோரியது.

இலங்கை கடற்படையின் கோரிக்கைக்கு ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி யூட்சன் இன்று அனுமதி வழங்கிவுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x