Last Updated : 30 Mar, 2021 04:59 PM

 

Published : 30 Mar 2021 04:59 PM
Last Updated : 30 Mar 2021 04:59 PM

தூத்துக்குடிக்குக் கூடுதலாக 8 கம்பனி துணை ராணுவப் படை வருகை: பணம், பரிசுப் பொருட்கள் விநியோகத்தைத் தடுக்க கண்காணிப்பு தீவிரம்

தூத்துக்குடி மாவட்டத்துக்குத் தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக, கூடுதலாக 8 கம்பெனி துணை ராணுவப் படையினர் வந்துள்ளனர். அவர்கள் தேர்தல் கண்காணிப்புக் குழுவினருடன் இணைந்து வாகனச் சோதனை உள்ளிட்ட பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக அசாம் மாநிலத்தில் இருந்து 160 பேரைக் கொண்ட 2 கம்பெனி எல்லை பாதுகாப்புப் படையினர் ஏற்கெனவே வருகை தந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து 8 கம்பெனி எல்லை பாதுகாப்புப் படையினர் தூத்துக்குடி மாவட்டத்துக்குத் தற்போது வந்துள்ளனர். இதில் மொத்தம் 584 வீரர்கள் உள்ளனர்.

இவர்களுக்குத் தேர்தல் பாதுகாப்புப் பணி தொடர்பாக ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக மைதானத்தில் இன்று நடைபெற்றது. மாவட்டத் தேர்தல் அதிகாரியான ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்து, தேர்தல் பாதுகாப்புப் பணிகள் குறித்து அறிவுரைகளை வழங்கினார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக ஏற்கெனவே 2 கம்பெனி எல்லை பாதுகாப்புப் படையினர் வந்து, தமிழக போலீஸாருடன் இணைந்து பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது புதிதாக 8 கம்பெனி எல்லை பாதுகாப்புப் படையினர் வந்துள்ளனர்.

இவர்கள் மாவட்டத்தில் பணியில் உள்ள பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்களுடன் இணைந்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர். விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் ஆகிய 5 தொகுதிகளுக்கும் தலா 9 பறக்கும் படைகளும், கோவில்பட்டி தொகுதிக்கு 15 பறக்கும் படைகள் என மொத்தம் 60 பறக்கும் படை குழுவினரும் பணியில் உள்ளனர். இந்த பறக்கும் படைகளில் துணை ராணுவப் படையைச் சேர்ந்த தலா ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 3 காவலர்கள் நியமிக்கப்பட்டு அனைத்துத் தொகுதிகளிலும் 24 மணி நேரமும் தீவிர வாகனச் சோதனை மேற்கொள்ளப்படும்.

இதேபோல் 6 தொகுதிகளிலும் மொத்தம் 55 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் பணியில் உள்ளன. பறக்கும் படைகளில் துணை ராணுவப் படையைச் சேர்ந்த தலா ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 2 காவலர்கள் நியமிக்கப்பட்டு அனைத்துத் தொகுதிகளிலும் தீவிர வாகனச் சோதனை மேற்கொள்ளப்படும். வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் விநியோகம் போன்றவற்றைத் தடுக்கும் பணியில் இவர்கள் ஈடுபடுவார்கள்.

மேலும், மாவட்டத்தில் உள்ள 19 எல்லை சோதனைச் சாவடிகளிலும் உள்ளூர் போலீஸாருடன் துணை ராணுவப் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். தொடர்ந்து வாக்குப் பதிவு தினத்தன்று வாக்குச்சாவடிகளில் இவர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். வாக்குச்சாவடிகளில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவது, முகக்கவசம் அணிந்து செல்ல வலியுறுத்துவது உள்ளிட்ட பாதுகாப்புப் பணிகளில் இவர்கள் ஈடுபடுவர்''.

இவ்வாறு ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் எல்லை பாதுகாப்புப் படை தளவாய் ராஜேஷ் மேகி, கூடுதல் தளவாய் சந்துகுமார் மற்றும் எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x