அனைத்து வேட்பாளர்களுக்கும் கரோனா பரிசோதனைக் கோரிய வழக்கு: மனுதாரர் ஓராண்டு பொது நல வழக்கு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் தடை

அனைத்து வேட்பாளர்களுக்கும் கரோனா பரிசோதனைக் கோரிய வழக்கு: மனுதாரர் ஓராண்டு பொது நல வழக்கு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் தடை
Updated on
1 min read

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் கரோனா பரிசோதனையை கட்டாயமாக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், அடுத்த ஓராண்டுக்கு பொது நல வழக்குகள் தாக்கல் செய்ய வழக்கறிஞருக்கு தடையும் விதித்துள்ளது.

தென்காசியைச் சேர்ந்த வழக்கறிஞர் பால்ராஜ் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “சட்டப்பேரவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்யக்கூடிய வேட்பாளர்கள் பலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், தேர்தலில் போட்டியிடும் 4,512 வேட்பாளர்களும் மருத்துவ பரிசோதனையை கட்டாயப்படுத்த வேண்டும்.

பிரச்சாரங்களில் ஈடுபடும் வேட்பாளர்கள், குழந்தைகளை முத்தமிடுகின்றனர். முதியோரை கட்டிப்பிடிக்கின்றனர். அவர்கள் மூலம் கரோனா பரவல் அதிகமாகும் அபாயம் இருக்கிறது. ஆகவே அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடவேண்டும்”. எனக் கோரி இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, உள்நோக்கத்துடன் அற்ப காரணங்களுக்காக, இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் மனுதாரருக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அடுத்த ஓராண்டுக்கு பொது நல வழக்குகள் தாக்கல் செய்ய தடை விதித்து உத்தரவிட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in