Last Updated : 30 Mar, 2021 12:42 PM

 

Published : 30 Mar 2021 12:42 PM
Last Updated : 30 Mar 2021 12:42 PM

அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடும் விராலிமலை தொகுதியில் மாவட்ட தேர்தல் அலுவலர், எஸ்.பி. நள்ளிரவில் வாகன சோதனை ஆய்வு

பூதகுடியில் வாகன சோதனையை ஆய்வு செய்யும் மாவட்ட தேர்தல் அலுவலர் பி.உமா மகேஸ்ரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன்.

புதுக்கோட்டை

மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் போட்டியிடும் தொகுதியான விராலிமலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர், வாகன சோதனை குறித்து நேற்று நள்ளிரவில் அதிரடி ஆய்வு செய்தனர்.

அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் ஆதரவாளர் வீரபாண்டியன் வீட்டில் அண்மையில் மேற்கொண்ட வருமான வரித்துறையினரின் சோதனையில் பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், அமைச்சரின் சகோதரர் உதயகுமாருக்குச் சொந்தமான கல்லூரியில் இருந்து சுமார் 650 பித்தளை பானைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

9 ஏ நத்தம்பண்ணை ஊராட்சி அலுவலகத்தில் இருந்து அமைச்சர் விஜயபாஸ்கர் படங்களுடன் கூடிய மூட்டை மூட்டையாக பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோன்று, பணம் விநியோகம் செய்யப்பட்டதாக திமுக பிரமுகர் 2 பேரை போலீஸார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையடுத்து, தமிழகத்தில் அதிக தொகை செலவழிக்கும் தொகுதிகளில் ஒன்றாக விராலிமலை உள்ளதால், இங்கு ஏற்கெனவே நியமிக்கப்பட்ட பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு, வீடியோ கண்காணிப்புக் குழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து, வாகன சோதனை, வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு மற்றும் பிரச்சார பொதுக்கூட்டங்கள் குறித்து தேர்தல் அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், பறக்கும் படையினர் முறையாக வாகன சோதனையை மேற்கொள்கின்றனரா என, மாவட்ட தேர்தல் அலுவலர் பி.உமா மகேஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் ஆகியோர் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை (மார்ச் 30) வரை காலாடிப்பட்டி, பூதகுடி, நவம்பட்டி போன்ற இடங்களில் திடீர் ஆய்வு செய்தனர்.

காலாடிப்பட்டியில் வாகன சோதனையை ஆய்வு செய்யும் மாவட்ட தேர்தல் அலுவலர் பி.உமா மகேஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன்.

அப்போது, "அனைத்து வாகனங்களையும் முறையாக சோதனையிட வேண்டும். தேர்தல் விதிகளை மீறுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் ரொக்கம், பரிசுப் பொருட்கள் போன்றவற்றைப் பறிமுதல் செய்ய வேண்டும்.

இதேபோன்று, எந்நேரத்திலும், எந்தப் பகுதிக்கும் சென்று நான் ஆய்வு செய்வேன். எனவே, தேர்தலுக்குக் குறைந்த நாட்களே உள்ளதால் தொய்வின்றி பணியாற்ற வேண்டும்" என, வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x