Last Updated : 30 Mar, 2021 03:14 AM

 

Published : 30 Mar 2021 03:14 AM
Last Updated : 30 Mar 2021 03:14 AM

தமிழக விஞ்ஞானியின் பெயர் சூட்டி பெருமைப்படுத்திய நாசா: நிலவில் விவசாயம் செய்ய உதவும் பாக்டீரியாவை கண்டுபிடித்த தமிழக விஞ்ஞானி

விஞ்ஞானி கஸ்தூரி வெங்கடேஸ்வரன், விஞ்ஞானி சயீத் அஜ்மல் கான் (வலது)

‘நட்புன்னா என்னனு தெரியுமா?’ என்று கேட்டால், அமெரிக்காவின் நாசா விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் தமிழகத்தில் வாழும் தன் ஆத்மார்த்த நண்பன் விஞ்ஞானி சயீத் அஜ்மல் கான் பெயரைச் சொல்கிறார். சும்மா வாய் வார்த்தைக்கு அல்ல தன்னுடைய உயிரியல் ஆராய்ச்சி கண்டுபிடிப்புக்கே நண்பனின் பெயரைச் சூட்டி நட்பை நிலைநாட்டி இருக்கிறார்.

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் சர்வதேச விண்வெளி நிலையத்தில் புதிதாக நான்கு பாக்டீரியாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ‘மித்திலோ பாக்டீரியாசியே’ என்ற வகை பாக்டீரியாவுக்கு ‘மித்திலோபாக்டீரியம் அஜ்மலீ’ என்ற பெயரை வழங்கியவர், நாசாவில் 25 ஆண்டுகளாக உயிரியல் விஞ்ஞானியாக பணிபுரிந்து வரும் கஸ்தூரி வெங்கடேஸ்வரன். அமெரிக் காவின் லாஸ் ஏஞ்சிலிஸ் நகரில் வசித்து வரும் அவர் ‘இந்து தமிழ்’ நாளிதழுக்காக அளித்த பேட்டி:

விண்வெளி நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட பாக்டீரியாவுக்கு பேராசிரியர் சயீத் அஜ்மல் கானின் பெயரை சூட்டியது ஏன்?

புதிய கண்டுபிடிப்புகள் நிகழும் போது அவற்றுக்கு அதிசிறந்த ஆளு மைகளின் பெயரைச் சூட்டுவது வழக்கம். அந்த வகையில், இதற்கு முன்னால் எங்களுடைய குழு கண்டுபிடித்த பாக்டீரியாக்களில் ஒன்றுக்கு டாக்டர் அப்துல் கலாமின் பெயரைச்சூட்டினோம். என்னைப் பொருத்தவரை என்னுடைய நெருங்கிய சினேகிதன் சயீத் அஜ்மல் கானும் அப்துல்கலாமுக்கு இணையான பேராளுமையே. அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் குறித்து ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் பலவற்றை அவர் செய்திருக்கிறார். இந்தியாவும், தமிழகமும் கொண்டாடத் தவறிய அறிவியல் கதாநாயகன் அவர். நான் அண்ணாமலை பல்கலையில் ஆராய்ச்சியாளராகவும் துறை ஆசிரியராகவும் பணிபுரிந்தபோது, அஜ்மலின் ஆற்றலையும் தன்னை முன்னிலைப்படுத்தாமல் நாள்தோறும் 18 மணி நேரம் ஆராய்ச்சியில் ஈடுபடும்பாங்கையும் கண்டு வியந்திருக்கிறேன். 50 ஆண்டுகளாக கடல்வாழ் உயிரியல் ஆராய்ச்சியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வரும் அவரை கவுரவப்படுத்தவே நான் கண்டுபிடித்த பாக்டீரியாவுக்கு ‘மித்திலோபாக்டீரியம் அஜ்மலீ’ என்ற பெயரைச் சூட்டினேன்.

தமிழகத்தைச் சேர்ந்த நீங்கள் எப்படி நாசாவில் பணியில் சேர்ந்தீர்கள்? அதுவும் கடல்வாழ் உயிரியல் விஞ்ஞானிக்கும் விண்வெளி ஆராய்ச்சிக்கும் என்னத் தொடர்பு?

கடலுக்குள் 3,000 மீட்டர் ஆழத் துக்கு நீந்தி சென்று கடல்மடியில் ஆராய்ச்சி செய்த முதல் தமிழன் நான். என்னுடைய வாழ்க்கையின் தொடக்கம் மிக எளிமையானது. ஈரோடு மாவட்டத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தேன். பள்ளி, கல்லூரிப் படிப்பில் எப்போதுமே முதலிடம்தான். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடல்வாழ் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றேன். பிறகு ஜப்பான் ஹிரோஷிமா நகரில் வேளாண்மை படிப்பிலும் முனைவர் பட்டம் பெற்றேன். கடல்வாழ் உயிரினங்கள் குறித்து பல கண்டங்களுக்கு கடல் மார்க்கமாகவே பயணித்து ஆராய்ச்சிகள் செய்தேன். அதிதீவிரமான தட்பவெட்பச் சூழலி லும் நுண்ணுயிர்கள் எப்படி உயிர் பிழைக்கின்றன என்பதை முன்னிறுத்தி ஆய்வுகள் செய்து வந்தேன். ஒரு கட்டத்தில், ஆழ்கடலில் இருந்து விண்வெளிக்கு என்னுடைய ஆராய்ச்சியை திசை திருப்பும் பேரார்வம் உண்டானது. அந்த உந்துதல்தான் நாசாவின் ‘ஜெட் ப்ரொபல்ஷன்’ ஆய்வுக்கூடத்தில் எனக்கு பணி வாய்ப்பை பெற்றுத் தந்தது.

நாசாவில் பல உயிரியல் விஞ்ஞானிகள் வேலை செய்து கொண்டிருக்கிறார் கள். ஏனென்றால் பூமியில் மட்டும்தான் உயிர் வாழ முடியுமா, வேறு கோள்களில் ஏன் முடியாது? போன்ற உயிரியல் சார்ந்த கேள்விகளுக்கான விடை தேடும் ஆராய்ச்சிகள் நாசாவில் நடைபெற்று வருகின்றன. இப்போது நாங்கள் கண்டெடுத்திருக்கும் பாக்டீரியாக்களும் அந்த தேடலுக்குத்தான் உதவக்கூடியவை.

சந்திர மண்டலத்திலும் செவ்வாய்க் கோளிலும் பயிரிட மண், நீர், காற்று, சூரிய ஒளி போல நுண்ணுயிர்களும் அத்தியாவசியம். பூமியில் இருந்து மனிதர்கள் வேற்று கிரகத்துக்குச் செல்ல பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், கூடவே பூமியில் இருந்து மண்ணை அள்ளிக் கொண்டு போய் விண்ணில் விவசாயம் செய்ய முடியாதே! சந்திரனிலும் செவ் வாயிலும் உள்ள மண்ணில் பயிரிட, தாவரங்களின் வேரை வளப்படுத்தும் பாக்டீரியாக்கள் வாழ்வதை இப்போது கண்டுபித்துவிட்டோம். முள்ளங்கி, கீரை வகைகளை சந்திரனில் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு வெங்கடேஸ் வரன் தெரிவித்தார்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் பரங்கிப்பேட்டையில் கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையம் உள்ளது. அண்ணாமலை பல்கலைக்கு உட்பட்ட இந்தத் துறையில் 1971-ல் துணை பேராசிரியராக பணியில் சேர்ந்து 2009-ல் பேராசிரியராக ஓய்வு பெற்றவர் முனைவர் சயீத் அஜ்மல் கான். பிறகு, தலைசிறந்த கல்வியாளர்களுக்கு வழங்கப்படும் ‘எமரிட்டஸ்’ பட்டம் இவருக்கு வழங்கப்பட்டு இவருடைய கல்விச் சேவையை தொடரும்படி பல்கலை கேட்டுக்கொண்டது. அதைத் தொடர்ந்து கவுரவப் பேராசிரியராக இன்றுவரை அண்ணாமலை பல்கலையில் கல்விப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நாசா தனக்கு வழங்கி யிருக்கும் அங்கீகாரம் குறித்து முனைவர் சயீத் அஜ்மல் கானிடம் பேசியபோது, “எல்லா புகழும் என் நண்பரையே சேரும். என் மீது தனிப்பட்ட முறையிலும் என் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் மீதும் அவர் மிகுந்த மரியாதை கொண்டவர். இந்த அங்கீகாரம் எனக்கு எதிர்பாராமல் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி” என்று சாந்தமாக பேசி தன்னுடைய நண்பரின் வாக்கை மெய்ப்பித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x