Published : 30 Mar 2021 03:14 AM
Last Updated : 30 Mar 2021 03:14 AM

தபால் வாக்குக்காக போலீஸார் பணம் பெற்ற வழக்கு; திருச்சி காவல் நிலையங்களில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை: சிசிடிவி கேமரா காட்சி பதிவுகள் சேகரிப்பு

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள திருச்சி மாநகர காவல் துறையினர் நேற்று முன்தினம் தங்கள் தபால் வாக்குகளை பதிவு செய்தனர்.

இதையொட்டி, திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீஸாருக்கு வழக்கறிஞர் மூலம் பண பட்டுவாடா செய்த புகாரின்பேரில் உறையூர், தில்லை நகர், புத்தூர் அரசு மருத்துவமனை, எடமலைப்பட்டி புதூர், கன்டோன்மென்ட், கே.கே.நகர், செசன்ஸ் நீதிமன்றம், பாலக்கரை ஆகிய 8 காவல் நிலையங்களில் காவல் மற்றும் வருவாய் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது, புத்தூர் மருத்துவமனை காவல் நிலையத்தில் ரூ.46 ஆயிரம், தில்லை நகர் காவல்நிலையத்தில் ரூ.24 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து, அரசுப் பணியில் இருந்து கொண்டு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்க பணம் பெற்றுக் கொண்டதாக காவல்நிலைய ரைட்டர்கள் பாலாஜி, சுகந்தி ஆகியோர் மீதும், அவர்களுக்கு பணம் அளித்ததாக திமுக வழக்கறிஞர் மணிவண்ண பாரதி உள்ளிட்ட 3 பேர் மீதும் மாநகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், இவ்விவகாரம் தொடர்பாக தில்லை நகர் காவல் ஆய்வாளர் சிவக்குமார் உட்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்குசிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, சிபிசிஐடி காவல்ஆய்வாளர்கள் இளங்கோவன் ஜென்னிங்க்ஸ், மயில்சாமி தலைமையிலான காவலர்கள் நேற்று தில்லை நகர், அரசு மருத்துவமனை ஆகிய காவல் நிலையங்களுக்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், சம்பவ நாளில் காவல் நிலைய சிசிடிவி கேமரா பதிவுகளையும் சேகரித்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "காவல் நிலைய சிசிடிவிகேமராக்களை ஆய்வு செய்தபோது, அதில் சில போலீஸாருக்கு பணம் வைக்கப்பட்டிருந்த கவர்களை பிரித்துக் கொடுத்த காட்சிகள், வழக்கறிஞர் மணிவண்ண பாரதியுடன் மேலும் 2 நபர்கள் நடந்து செல்லக் கூடிய காட்சிகள் ஆகியன இடம் பெற்றுள்ளன. அவற்றை சிபிசிஐடி போலீஸார் சேகரித்துக் கொண்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x