Published : 30 Mar 2021 03:15 AM
Last Updated : 30 Mar 2021 03:15 AM

‘குவார்ட்டர், பணம், பிரியாணி தரமாட்டோம்!’ - வெளிப்படையான நேர்மையான நிர்வாகத்தை தருவோம்: ஜூம் ஆப் மூலம் செஞ்சியில் கமல்ஹாசன் பிரச்சாரம்

மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் வெளிப்படையாக இருக்கும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம், செஞ்சி, திருவண்ணாமலை தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நீதிமய்ய வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று மாலை செஞ்சியில் ஜூம் ஆப் மூலம் பிரச்சாரம் செய்து பேசியது:

‘நேர்மை’ என்று பேசினால், ‘இந்த நாளில் அது எங்கே கிடைக்கிறது?’ என்று சிலர் கிண்டலாக கேட்கிறார்கள். ‘குவார்ட்டர், பணம், பிரியாணி கொடுப்பார்களா!’ என்று சிலர் கேட்கிறார்கள். நீங்கள் இவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தீர்களே, உங்களுக்கு யார் பிரியாணி கொடுத்து உட்கார வைத்தது. தமிழகம் சீரமைய வேண்டும் என்று களத்தில் காத்திருந்தீர்கள். ‘உங்களை மதிக்காமல் அசட்டையாக போய் விட்டேன்’ என்று மட்டும் நினைக்காதீர்கள். நேரம் நம்மை இயக்குகிறது.

புதுச்சேரியில் இருந்து கிளம்ப முடியாமல் 144 தடை இருந்தது. காந்தியார் காலம் முதல் 144 தடை என்னவென்று பார்த்து வருகிறேன். நான் மீண்டும் இப்பகுதிக்கு வருவேன். செஞ்சிக் கோட்டையை சுற்றுலா மையமாக மாற்ற வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அவருக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு அதை எதற்கு செலவு செய்தார். என்பதை நீங்களே பார்க்கலாம். அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் வெளிப்படையாக இருக்கும்.

இல்லத்தரசிகளுக்கான எங்கள் திட்டங்களை எவ்வளவு நல்ல திட்டங்களாக இருந்தாலும் அதை கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் காப்பி அடித்து விட்டனர். அவர்கள் காப்பி அடித்து விட்டார்கள் என்ற பயம் இல்லை. அவர்கள் எதை அறிவித்தாலும் செயல்படுத்த மாட்டார்கள். மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதரவு தந்தால் அது தலைமை பதவிக்கு என்னை உயர்த்தும். நாளை நமதாகும்.

இவ்வாறு கமல் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x