

ராகு- கேது தோஷ பரிகாரத் தலமான கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் சசிகலா நேற்று தரிசனம் செய்தார்.
சசிகலா தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பரிகாரக் கோயில்களுக்கு கடந்த ஒரு மாதமாக சென்று வருகிறார். கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் சமேத பூவனநாத சுவாமி கோயிலுக்கு நேற்று காலை அவர் வந்தார். அவரைக் காண அமமுக தொண்டர்கள் கோயில் முன் திரண்டனர். காலை 10.50 மணியளவில் சசிகலா கோயிலுக்கு காரில் வந்தார். அவருக்கு தாரை, தப்பட்டை முழங்க கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.
கோயிலுக்குள் சென்ற அவர் முதலில் அம்மன் சந்நிதிக்கும், பின்னர் பூவனநாத சுவாமி சந்நிதிக்கும் சென்று தனது பெயரில் அர்ச்சனை செய்து வழிபட்டார். அக்கோயிலின் தல வரலாறு மற்றும் சிறப்புகளை அர்ச்சகரிடம் கேட்டறிந்தார். 11.25 மணிக்கு அவர் கோயிலில் இருந்து புறப்பட்டு சென்றார். அவருடன் டாக்டர் வெங்கடேஷ், அமமுக தென் மண்டல பொறுப்பாளர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
காமிக ஆகமப்படி நிர்மாணிக்கப்பட்டுள்ள செண்பகவல்லி அம்மன் கோயில் ராகு-கேது தோஷத்துக்கு சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது.