Published : 29 Mar 2021 08:00 PM
Last Updated : 29 Mar 2021 08:00 PM

தலைமை அலுவலர் தவிர வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குட்பட்ட பகுதியில் செல்போன், வயர்லெஸ் பயன்படுத்தக்கூடாது: தேர்தல் ஆணையம்

மதுரை 

வாக்குச்சாவடி தலைமை அலுவலர் தவிர வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குட்பட்ட பகுதியில் செல்போன், வயர்லெஸ்செட், கார்டுலெஸ் போன் போன்றவற்றை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடி மையங்களில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துளளது.

சட்டப்பேரவைத் தேர்தலையோட்டி, வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும், வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய கட்டுப்பாடுகளைப் பற்றியும் தேர்தல் ஆணையம் வழிகாட்டியுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் வருமாறு:

தேர்தல் ஊழியர்கள் வாக்குச்சாவடியை விட்டு வெளியே போனால் நடவடிக்கை எடுக்கப்படும். வாக்குச்சாவடி தலைமை அலுவலர் தவிர வாக்குச்சாவடியிலுள்ள மற்றும் வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குட்பட்ட பகுதியில் செல்போன், கார்ட்லெஸ் போன் மற்றும் வயர்லெஸ் செட் பயன்படுத்தக்கூடாது.

பார்வையின்மை காரணமாக அல்லது பிற வகை உடல் நலிவு காரணமாக வாக்காளர் ஒருவர், பிறரின் உதவியில்லாமல் வாக்குப்பதிவு கருவி மீதுள்ள சின்னங்களை அறிந்து கொள்ள அல்லது அதிலுள்ள பொருத்தமான பட்டனை அழுத்தி அவரது வாக்கைப்பதிவு செய்ய இருக்கிறார் என்று வாக்குச்சாவடி தலைமை அலுவலர் சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெரிந்து கொண்டால் அந்த வாக்காளரின் சார்பில் வாக்கினை பதிவு செய்வதற்கு 18 வயது குறையாத உதவியாளருக்கு விதி 49N8ன் கீழ் அனுமதி வழங்கலாம்.

ஒருவருக்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு உதவியாளராக ஒரே நபர் செயல்படுவதற்கு யாரையும் அனுமதிக்கக்கூடாது. வாக்காளருக்கு உதவியாளராக செயல்படுவதற்கு யாதொரு நபரை அனுமதிக்கும் முன் வாக்காளரின் சார்பில் அவர் பதிவு செய்த வாக்கின் ரகசியத்தை காப்பார் எனவும், அவர் அந்த நாளில் யாதொரு வாக்குச்சாவடியிலும் வேறு எந்த வாக்காளருக்கும் உதவியாளராக ஏற்கெனவே செயல்படவில்லை எனவும், அவரிடம் உறுதிமொழி ஒன்றைப்பெற வேண்டும்.

இதற்கான Declaration by the Companion to Blind and Infirm Voters என்ற படிவம் வழங்கப்படும்.

வாக்காளருக்கு உதவியாளராக வரும் நபருக்கு அவரது வலது கையில் ஆட்காட்டி விரலில் மை வைத்திட வேண்டும்.

80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியவர்களுக்கு அஞ்சல் வாக்கு சீட்டு மூலம் வாக்களிக்க உரிய நடவடிக்க ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த நடைமுறை விவரங்கள் தனியே வழங்கப்படும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x