Last Updated : 29 Mar, 2021 06:55 PM

 

Published : 29 Mar 2021 06:55 PM
Last Updated : 29 Mar 2021 06:55 PM

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர்: டி.ராஜா தகவல்

டி.ராஜா

கோவை

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா கோவையில் இன்று தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலர் டி.ராஜா கோவையில் இன்று (மார்ச் 29) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"தமிழகத்தில் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். அதிமுக, பாஜக கூட்டணியை மக்கள் தோல்வியடையச் செய்வர். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் இந்தியாவின் எதிர்கால அரசியலை தீர்மானிக்க உள்ளது. நடப்புத் தேர்தல்களில் பாஜக வீழ்ச்சி அடையும். தமிழகத்தில் நடக்க உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும். பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரிவு . ஜனநாயக கட்டமைப்புகளை பிளவுபடுத்தி மத ரீதியாக நிலை நிறுத்துவதை அக்கட்சி முன்னெடுக்கிறது.

மத்திய பாஜக ஆட்சியில், இந்தியாவின் மதச்சார்பற்ற அடிப்படைகள் எல்லாம் தகர்க்கப்பட்டு வருகின்றன. மத்தியப்பிரேதசம், உத்தரப்பிரேதசம், ஹரியாணா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்களை மதம், மொழி, கலாச்சாரம், கடவுளின் பெயரால் பாஜக பிளவுபடுத்தி வருகிறது.

பாஜக ஆளும் மாநிலங்களில் வன்கொடுமை தலை விரித்தாடுகிறது. இதை நாடு முழுவதும் அமல்படுத்த பாஜக, ஆர்எஸ்எஸ் முயற்சிக்கிறது. அந்த வன்கொடுமைகளுக்கு இடமாகக்கூடாது என தமிழகத்தில் திமுகவோடு கூட்டணி வைத்துள்ளோம். இந்திய அரசு, மக்கள் நல அரசு என்ற நிலையில் இருந்து, தற்போது பெரும் முதலாளிகளின் அரசாக மாறியிருக்கிறது. எப்போதும் இல்லாமல். தனியார்மயமாதலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஊக்குவிக்கிறது. அனைத்து மக்களின் வாழ்வாதாரம் , இந்திய பொருளாதாரம் நிலைகுலைந்து வருகிறது. நாடு முழுவதும் ஏழ்மை வளர்ந்து வருகிறது.

பொதுத்துறை நிறுவனஙகள் தனியார்மயமாக்கப்படுகின்றன. பாதுகாப்பு துறையை, அந்நிய மூலதனத்துக்காக திறந்து விடப்படுகிறது. அணு உலை மற்றும் விஞ்ஞானம் என அனைத்திலும் தனியார்மயம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களை மக்களின் சொத்துகளாக பார்க்க வேண்டும். மக்கள் நல அரசில் இருந்து, நரேந்திர மோடி அரசு விலகி, ஒரே நாடு ஒரே கட்சி நிலையை நோக்கி செல்கிறது. இப்படிச் சென்றால் இந்திய ஜனநாயகம் என்னவாகும்? என கேள்வி எழுந்துள்ளது.

மத்திய பாஜக அரசிடம் கேள்வி கேட்பவர்கள், விமர்சிப்பவர்கள் எல்லாரும் தேச விரோதிகளாக பார்க்கப்படுகின்றனர். இந்திய ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அடியாக மோடியின் ஆட்சி உள்ளது. மாநில சுயாட்சி உரிமைகள், பொருளாதார கொள்கைகள் அனைத்தும் பறிக்கப்படுகிறன. மத்திய அரசு எதேச்சையாக செயல்படுகிறது.

புதிய கல்விக்கொள்கை, ஒரே விதமான கல்வியை திணிக்க பிற்போக்குத்தனமான அணுகுமுறையோடு மத்திய அரசு செயல்படுகிறது. அதிமுக மாநில உரிமைகளை, மக்களின் நலன்களை பாதுகாக்கவில்லை. அடிப்படை மாநில உரிமைகளை காப்பாற்ற அதிமுக அரசு தவறிவிட்டது. தமிழகத்தில் பாஜக காலூன்ற, அதிமுக காரணமாக உள்ளது. பொறுப்பற்ற அதிமுக ஆட்சியை மாற்ற மக்கள் தயாராக உள்ளனர். பாஜக மற்றும் அதிமுக சேர்ந்து போனால், மக்கள் ஏற்க மாட்டார்கள்".

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x