Published : 29 Mar 2021 05:47 PM
Last Updated : 29 Mar 2021 05:47 PM

வேட்பு மனு நிராகரிப்பு; திருத்தணி தொகுதி தேர்தலை ஒத்திவைக்கக்கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் மறுப்பு

வேட்புமனுவை சரியாக பரிசீலிக்காமல் தனது மனுவை அதிகாரிகள் நிராகரித்ததால் திருத்தணி தொகுதி தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்கில் தேர்தலை ஒத்திவைக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

திருத்தணி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்த என்.அருண் என்பவர் மனு தள்ளுபடியானது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அவர் தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “சிஎம்டிஏவில் பணியாற்றி, எஸ்.சி/எஸ்.டி. ஊழியர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவராக இருந்து ஓய்வுப் பெற்ற பின்னர், சமூக ஆர்வலராக பணியாற்றி வருகிறேன்.

திருத்தணி தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்தேன், வேட்பு மனு தாக்கலின் இறுதிநாளன்று நெடுநேரம் காத்திருக்க செய்த பின்னரே தேர்தல் அலுவலர் மனுவை பெற்றார். என்னை முன்மொழிந்த 10 பேரை தேர்தல் அலுவலரின் ஆட்களே முன்மொழிவை திரும்பப் பெறும்படி மிரட்டினார்.

பின்னர் வேட்பு மனு பரீலிக்கப்பட்ட பிறகு முன்மொழிந்தவர்களின் கையெழுத்து சரியாக இல்லை என என் மனு நிராகரிக்கப்பட்டது. யாரிடம் வேண்டுமானாலும் புகார் அளித்துக்கொள் என அதிகாரி அலட்சியம் செய்தார்.

எனவே புதிதாக 10 முன்மொழிபவர்கள் கையெழுத்துடன் புதிய வேட்புமனுவை பெற்று அதில் உரிய முடிவெடுக்கவும், அதுவரை திருத்தணி தொகுதி தேர்தலை தள்ளிவைக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி செந்தில் குமார் மூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.ராஜ்குமார், தேர்தல் ஆணையம் தரப்பில் நிரஞ்சன் ராஜகோபாலன் ஆகியோர் ஆஜரானார்கள்.

வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தேர்தல் வழக்காக மட்டுமே தொடர முடியுமென தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து அருண் வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x