Published : 29 Mar 2021 12:52 PM
Last Updated : 29 Mar 2021 12:52 PM

தங்கம் தென்னரசுவைத் தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கு: தேர்தல் ஆணையத்தை அணுக உயர் நீதிமன்றம் உத்தரவு

திருச்சுழி தொகுதியின் தேர்தலை ரத்து செய்வது மற்றும் திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசுவைத் தகுதி நீக்கம் செய்யும் கோரிக்கை குறித்து தேர்தல் ஆணையத்தை அணுக மனுதாரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் திருப்பதி என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருச்சுழி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தங்கம் தென்னரசு, கடந்த 19-ம் தேதி காரைபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட அவியூர் கிராமத்தில் வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருட்கள், சில்வர் பாத்திரங்கள், பொங்கல் பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புகைப்படத்துடன் தொகுதி தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்கவும் தேர்தல் அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் தெரிவித்துள்ளார்.

திருச்சுழி தேர்தல் அதிகாரியும் தங்கம் தென்னரசுக்குச் சாதகமாகச் செயல்படுவதாகவும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் வெறும் காகித அளவில் மட்டுமே உள்ளதாகவும் கூறியுள்ளார்.

திருச்சுழி தொகுதி தேர்தலை ரத்து செய்வதுடன், திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.

இந்நிலையில் இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் கோரிக்கை குறித்து உரிய ஆவணங்களுடன் தேர்தல் ஆணையத்தை அணுகும்படியும், அதை ஆராய்ந்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்றும் உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x