Published : 29 Mar 2021 12:55 PM
Last Updated : 29 Mar 2021 12:55 PM

ஆட்சி மாற்றத்தின் மூலமே நீட், புதிய கல்விக் கொள்கை பாதிப்புகளிலிருந்து தமிழக மாணவர்களைப் பாதுகாக்க முடியும்: கே.எஸ்.அழகிரி

ஆட்சி மாற்றத்தின் மூலமே நீட் மற்றும் புதிய கல்விக் கொள்கை பாதிப்புகளிலிருந்து தமிழக மாணவர்களைப் பாதுகாக்க முடியும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (மார்ச் 29) வெளியிட்ட அறிக்கை:

"நீட் தேர்வையும், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையையும் எதிர்த்து, தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. எதிர்க்கட்சிகளின் போராட்டம் காரணமாகவே மருத்துவப் படிப்புகளில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி சட்டம் இயற்றப்பட்டது. இதன் அடிப்படையில், எம்பிபிஎஸ் படிப்பில் சேர 313 அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் பல் மருத்துவப் படிப்பில் சேர 92 மாணவர்களுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 25 மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 3,400 இடங்கள் உள்ளன. இதில், 405 இடங்களில் மட்டுமே 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது

இதுவே போதுமானதாக இல்லை என்று நாம் போராடிக் கொண்டிருக்கும்போது, பி.எஸ்.சி. நர்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கையும் நீட் தேர்வின் மூலம் நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது தமிழகத்துக்கு மத்திய பாஜக அரசு செய்யும் தொடர் துரோகமாகவே தெரிகிறது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மட்டும் வைத்துக்கொண்டு தேர்வு நடத்தினால், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் எப்படி நீட் தேர்வை எதிர்கொள்ள முடியும்? கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வந்தால் மட்டுமே, கல்வித் தரத்தை உயர்த்தி, நீட் தேர்வை நம் அரசுப் பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் தயார்படுத்த முடியும். அரசுப் பள்ளிகளுக்கான தரமான தேவைகளை மாநில அரசு ஆராய வேண்டும்.

2020 புதிய கல்விக் கொள்கை குறித்து நாம் நிறையவே விவாதித்துவிட்டோம். இதுகுறித்து, ஆராயக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு குறித்து இதுவரை தெரியவில்லை. புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் முன்பு, மாநில அரசுகளின் மதிப்பீட்டைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, புதிய கல்விக் கொள்கைக்குக் கல்லூரிப் பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். புதிய கல்விக் கொள்கையால் தங்களுக்குப் பணிப் பாதுகாப்பு இருக்காதோ என்ற அச்சம் அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அரசுக் கல்லூரிகளில் 1,500 பணியிடங்களும், சுயநிதிக் கல்லூரிகளில் அதே அளவுக்குப் பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன.

இதனால் தங்களுக்கு வேலைப் பளு அதிகரித்துவிடுமோ? என்ற அச்சம் பேராசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாதது, வேலை பாதுகாப்பு மற்றும் சம்பளப் பிரச்சினை ஆகியவை கல்லூரி ஆசிரியர்களின் முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது. இதையெல்லாம் ஆராயாமல் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் பெரும் பாதிப்பையே ஏற்படுத்தும்.

கல்வியில் மத்திய அரசு தலையிடக் கூடாது. மாநிலப் பட்டியலில் சேர்த்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் தனது தேர்தல் அறிக்கையில், கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தியுள்ளது. நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். ஆனால், அதனை எதிர்த்து இதுவரை முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பவில்லை.

நீட் தேர்வு நடைமுறைக்கு வரும் முன்பு, 2015-16இல் 456 மாணவர்களும், 2016 -17இல் 438 மாணவர்களும் மருத்துவக் கல்லூரிகளில் சேருகிற வாய்ப்பைப் பெற்றிருந்தனர். ஆனால், நீட் தேர்வு அறிமுகமானதற்குப் பிறகு, 2017இல் 7 மாணவர்களும் 2018இல் 5 மாணவர்களும், 2019இல் ஒரு மாணவர் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேர முடிந்தது. கல்வியைப் பொறுத்தவரை, மாநில அரசுகள் மீது மத்திய அரசு திணிக்கக் கூடாது.

திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும், மத்திய பாஜக மற்றும் அதிமுக அரசால் கசக்கிப் பிழியப்படும் தமிழக மாணவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தரப்படும் என்பதையும் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி மாற்றத்தின் மூலமே நீட் மற்றும் புதிய கல்விக் கொள்கை பாதிப்புகளிலிருந்து தமிழக மாணவர்களைப் பாதுகாக்க முடியும்".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x