உறவினரான திமுக வேட்பாளருக்கு ஆதரவாகச் செயல்படும் தேர்தல் நடத்தும் அலுவலர்: பாமக வேட்பாளர் புகார்

உறவினரான திமுக வேட்பாளருக்கு ஆதரவாகச் செயல்படும் தேர்தல் நடத்தும் அலுவலர்: பாமக வேட்பாளர் புகார்
Updated on
1 min read

செஞ்சி தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆதரவாகத் தேர்தல் நடத்தும் அலுவலர் செயல்படுவதாகப் பாமக வேட்பாளர் புகார் தெரிவித்துள்ளார்.

திமுக வேட்பாளர் கே.எஸ்.மஸ்தானும், அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் எம்.பி.எஸ்.ராஜேந்திரனும் செஞ்சி தொகுதியில் போட்டியிடுகின்றனர். இருவரும் பரபரப்பாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று செஞ்சி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் செஞ்சி தொகுதி தேர்தல் பார்வையாளருக்கு பாமக வேட்பாளர் ராஜேந்திரன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

''செஞ்சி தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலராகப் பதவி வகிக்கும் நெகருன்னிசா திமுக வேட்பாளர் மஸ்தானின் உறவினர் ஆவார். திமுக வேட்பாளர் வாக்காளர்களுக்கு அரிசி, பணம் கொடுப்பது குறித்துப் புகார் தெரிவித்தபோது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

புகார் தெரிவிக்க செல்பேசியில் பல முறை அழைத்தாலும் அழைப்பை ஏற்பதில்லை. ஆனால் வேறு எண்களில் அழைத்தால், அழைப்பை ஏற்றுப் புகார் சொல்வதைக் கேட்கிறார்.

மேலும் தேர்தல் நடத்தும் அலுவலரின் அப்போதைய இருப்பிடம், அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் தகவல் தெரிவிக்கிறார். மேலும் அரிசி, பண விநியோகம் செய்வதற்கு திமுக வேட்பாளருக்கு உதவியாகவும் இருக்கிறார். திமுக வேட்பாளரின் தேர்தல் விதிமீறல்களுக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த 27-ம் தேதி இரவு 10.45 வரை பிரச்சாரம் செய்த திமுக வேட்பாளர் மீது தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் அவர் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டு வருகிறார்.

அவர் இங்கு தொடர்ந்து பணியில் இருந்தால் நேர்மையாகத் தேர்தல் நடைபெறாது. எனவே அவர்மீது விசாரணை மேற்கொண்டு, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்''.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in