Last Updated : 29 Mar, 2021 09:34 AM

 

Published : 29 Mar 2021 09:34 AM
Last Updated : 29 Mar 2021 09:34 AM

ஆண்ட, ஆளும் கட்சிக்கு தேர்தல் ஆணையம் சாதகமாக செயல்படுகிறதா?- விழுப்புரம் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் விளக்கம்

தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்காத இடத்தில் பிரச்சாரம் செய்தவர்கள், பிரச்சாரம் செய்ய இருப்பவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பொதுக்கூட்டம் நடத்திட ஏதுவாக கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றி சட்டப்பேரவைத் தொகுதிகளில் முக்கிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 56 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்கள் பற்றிய விவரம் விழுப்புரம் மாவட்ட இணையதளமான https://villupuram.nic.in என்ற இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி இடங்களில் மட்டுமே கட்சி பொதுக்கூட்டங்கள் நடத்திட அனுமதிக்கப்படும். அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் அனுமதி அளிக்க போதிய கால அவகாசம் அளித்து விண்ணப்பிக்கவேண்டும்.

56 இடங்களில் தங்களுக்கு ஏதுவான இடத்தினைக் குறிப்பிட்டு கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கைகளை முழுமையாக பின்பற்றி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவும் என மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் அண்ணாதுரை கடந்த 8ம் தேதி வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருந்தார்.

விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 6 இடங்கள் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த 20ம் தேதி அதிமுக வேட்பாளர் சிவி சண்முகத்தை ஆதரித்து விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனை தொடர்ந்து 24ம் தேதி மாலை திமுக தலைவர் ஸ்டாலின் திமுக மற்றும் விசிக வேட்பாளர்களை ஆதரித்து இதே இடத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட விழுப்புரம் நகராட்சி திடலில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஆண்ட, ஆளும் கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறி, பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்படாத இடத்தில் பிரச்சாரம் மேற்கொண்டது குறித்து அமமுக மண்டல பொறுப்பாளர் பாலசுந்தரத்திடம் கேட்டபோது, ஆளும் கட்சி, ஆண்ட கட்சிகள் தேர்தல் ஆணயத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். எங்கள் கட்சி பிரச்சாரத்தின்போது ஏகப்பட்ட கெடுபிடிகள் செய்கின்றனர். போலீஸார் பாரபட்சமாக நடந்துகொள்கிறார்கள். இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்க உள்ளோம் என்றார்.

மேலும் இது குறித்து மக்கள் நீதிமய்யத்தின் கடலூர் மண்டல பொறுப்பாளர் ஸ்ரீபதியிடம் கேட்டபோது, பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டாலும் இந்த ஆவணம் இல்லை. அந்த ஆவணம் இல்லை என்று ஏதாவது ஒரு காரணம் சொல்லி நிராகரிக்கிறார்கள்.

பிரச்சாரம் செய்ய ஏகப்பட்ட கெடுபிடிகள் செய்கிறார்கள். ஆனால் திமுக, அதிமுக மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்களின் விதிமீறலை தேர்தல் ஆணையம் கண்டும் காணாமல் உள்ளது என்றார்.

இது குறித்து விழுப்புரம் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியர் அரிதாஸிடம் கேட்டபோது, தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்காத இடத்தில் பிரச்சாரம் செய்தவர்கள், பிரச்சாரம் செய்ய இருப்பவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

நடந்து முடிந்த பிரச்சாரக் கூட்டம் குறித்து அறிக்கை அளிக்கும்படி விழுப்புரம் டிஎஸ்பிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அறிக்கை வந்தவுடன் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், ஆளும்கட்சியினரின் அத்துமீறலை தடுக்கும் சக்தி தேர்தல் ஆணையத்திற்கு இல்லை என்று கூறியது குறிப்பிடதக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x