Published : 29 Mar 2021 03:15 AM
Last Updated : 29 Mar 2021 03:15 AM
பிரதமர் நரேந்திர மோடியுடன் கமல்ஹாசன் விவாதிக்க தயார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொது செயலாளர் சி.கே.குமாரவேல் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு பதில் அளித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ‘‘மக்களுடைய பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள், ஆட்சி நிர்வாகம் பற்றிய புரிதல் தொடர்பாக வானதி சீனிவாசனுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விவாதம் செய்ய தயாரா?” என்று சவால் விடுத்தார்.
இதற்கு பதிலளித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கே.குமாரவேல் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, கமல்ஹாசனை பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுடன் விவாதத்துக்கு அழைத்துள்ளார். விவாதம் செய்தால்தான் யாருக்குநிர்வாக திறன் உள்ளது தெரியவரும் என்பது அவரது வாதம். அவரது சவாலை ஏற்றுக்கொள்கிறோம். முதலில், பிரதமர் மோடியுடன் விவாதம் செய்ய கமல் விரும்புகிறார்.
அதையடுத்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் விவாதம் செய்ய விரும்புகிறார். அடுத்தடுத்து பாஜக அமைச்சரவையினர் ஒவ்வொருவருடனும் விவாதம் செய்துவிட்டு கடைசியாக வானதி சீனிவாசனுடன் விவாதத்தை வைத்துக்கொள்ளலாம். பிரதமருடன் விவாதத்துக்கு ஸ்மிருதி இரானி ஏற்பாடு செய்யட்டும்.
ஏற்கெனவே, இருமுறை தேர்தல்களில் போட்டியிட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டு இப்போது 3-வது முறையாக தோற்க தயாராகி இருப்பவர் வானதி சீனிவாசன். ஆளுமைஇல்லாத அவரோடு விவாதிக்க எங்கள் மாணவர் அணியினர் போதும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT