Published : 29 Mar 2021 03:15 AM
Last Updated : 29 Mar 2021 03:15 AM

பதற்றம் நிறைந்த பகுதிகளில் துணை ராணுவப் படையினர் நிறுத்தம்; தேர்தல் அமைதியாக நடைபெற தீவிர ஏற்பாடு: காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தகவல்

சென்னை பெருநகரின் முக்கிய இடங்களில் போலீஸாரும், தேர்தல் பறக்கும் படையினரும் வாகன சோதனைகள் மேற்கொண்டு, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்படுவோர் மீது, நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், நேற்று மதியம் அமைந்தகரை, ஸ்கைவாக் சிக்னல் அருகில் நடைபெற்று வரும் தேர்தல் பறக்கும் படையினரின் வாகனத் தணிக்கை பணியை ஆய்வு செய்தார். அண்ணாநகர் காவல் துணை ஆணையர் ஜி.ஜவஹர் உடனிருந்தார்.

சென்னை

தேர்தலை அமைதியான முறையில் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப் பதிவு அடுத்த மாதம் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. சென்னை பெருநகரில் உள்ள வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் பாதுகாப்பு தொடர்பான பணிகள் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், சென்னை பெருநகரில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்கு அளிக்க உரிய பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்திடவும், சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும், தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸார், மத்திய துணை ராணுவப் படையினர் ஒருங்கிணைந்து, மக்கள் கூடும் இடங்கள், வசிப்பிட பகுதிகளில் காவல் கொடி அணிவகுப்பு நடைபெற்று வருகிறது.

தேர்தல் பறக்கும் படையினருடன், சென்னை போலீஸார் ஒருங்கிணைந்து முக்கிய இடங்களில் வாகன சோதனைகள் மேற்கொண்டு, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்படுவோரை கண்டறிந்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் நேற்று மதியம் வாகனத் தணிக்கைகள் நடைபெற்ற இடங்களில் ஒன்றான அமைந்தகரை, ஸ்கைவாக் சிக்னல் அருகில் நடைபெற்ற தேர்தல் பறக்கும் படையினரின் வாகனத் தணிக்கை பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறும்போது, ``சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோரை தடுக்க மற்றும் கண்டறிய சென்னை பெருநகர் முழுவதும் தொடர் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. இதுவரை ரூ.7.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுமார் ரூ.23 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளோம். அமைதியான முறையில் தேர்தலை நடத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த 2 ஆயிரம் ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் அமைதியான முறையில் நடைபெற தீவிர ஏற்பாடுகளை செய்துள்ளோம். பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளில் மத்திய துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அனைத்து போலீஸாருக்கும் கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 தினங்களில், ஆயிரம் போலீஸாருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x