Published : 29 Mar 2021 03:17 AM
Last Updated : 29 Mar 2021 03:17 AM

திருவண்ணாமலையில் தடையை மீறி பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம்

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் தடையை மீறி பக்தர்கள் நேற்று கிரிவலம் சென்றனர்.

கரோனா பரவலை தடுக்க கடந்தாண்டு மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால்,தி.மலையில் மாதந்தோறும் நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு ஓராண்டாக தொடர்கிறது. கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதாக கூறி, பங்குனி மாதத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

இந்த தடை உத்தரவை மீறி பக்தர்கள் நேற்று கிரிவலம் சென் றனர். அதிகாலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். நேரம் செல்ல செல்ல பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பகல் 12 மணிக்கு பிறகு, பக்தர்களின் எண்ணிக்கை சற்று தணிந்திருந்தது. அதன்பிறகு மீண்டும் அதிகரித்தது.

இந்த தகவலறிந்த காவல் துறையினர் செங்கம் சாலையில் சென்ற பக்தர்களிடம் கரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் யாரும் கிரிவலம் செல்ல வேண்டாம் என அறிவுரை வழங்கினர். இருப்பினும் காவல் துறையினரின் அறிவுரையை ஏற்க மறுத்து தொடர்ந்து கிரிவலம் சென்றனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது,, “ஊரடங்கில்தளர்வு அளிக்கப்பட்டது முதல், இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி உள்ளனர். அனைத்து மத திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. தேரோட்டங்கள் நடை பெறுகின்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபடுகின்றனர். சுற்றுலா தலங்களிலும் பொதுமக்கள் அதிகளவில் கூடுகின்றனர். திருமண விழாக்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் மக்கள் கூடுகின்றனர்.

தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற் கும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகி கள் கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவது இல்லை. முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளி இல்லாமலும் பங்கேற்கின்றனர். அந்த இடங்களில் பரவாத கரோனா, பவுர்ணமி கிரிவலத்தில் மட்டும் பரவும் என கூறுவது சரியா?. வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருவார்கள், அதன்மூலம் கரோனா பரவிவிடும் என்கிறார்கள்.

கரோனா பரவலை காரணமாக கூறி, எங்களது நம்பிக்கையை கடந்த ஓராண்டாக முடக்கினார்கள். ஊரடங்கு அமலில் இருந்தபோது, அரசின் உத்தரவை மதித்து கிரிவலம் செல்ல யாரும் வரவில்லை. அனைத்தும் சகஜ நிலைக்கு திரும்பிய பிறகு பவுர்ணமி கிரிவலத்துக்கு மட்டும் தடுப்பது ஏன்? எனவே தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்காமல் அனுமதிக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x