Last Updated : 28 Mar, 2021 09:26 PM

 

Published : 28 Mar 2021 09:26 PM
Last Updated : 28 Mar 2021 09:26 PM

பாஜகவைத் தவிர புதுச்சேரியை யாராலும் காப்பாற்ற முடியாது: நடிகர் ராதாரவி பிரச்சாரம்

புதுச்சேரி

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து நடிகர் ராதாரவி இன்று (மார்ச் 28) மாலை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

திருக்கனூர் கடை வீதியில் அவர் பேசியதாவது, ‘‘புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக, பாமக இணைந்து சிறப்பான கூட்டணி அமைந்துள்ளது. நான் முக்கியமாக இங்கு பேச ஒப்புக்கொண்டதே பாமக நம்மோடு இணைந்ததற்காக மட்டும் தான். துரோகிகளோடு சேர்ந்து நானும் சாடியுள்ளேன். அதற்கெல்லாம் பாவத்தின் பிராய்சித்தமாகத்தான் பாஜகவில் இணைந்து இப்போது பேசுகிறேன்.

அம்பேத்கரைப் பற்றி எல்லோரும் பேசலாம், சொந்தம் கொண்டாடலாம். ஆனால் தமிழகத்தில் ஒரே நாளில் அம்பேத்கரின் 7 சிலைகளை திறந்தது ராமதாஸ் மட்டும் தான். அம்பேத்கர் லண்டனில் வாழ்ந்த இல்லத்தை பாஜக அரசு வாங்கி, அம்பேத்கரின் நினைவு சின்னமாக மாற்றியுள்ளனர்.

அங்கு பட்டியலினத்து மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் சென்று தங்கலாம். இதுபோன்ற வசதிகளை மோடி செய்துள்ளார். இன்னும் 40 ஆண்டுகளுக்கு மத்தியில் ஆளப்போவது பாஜகதான். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

நீங்கள் கையேந்தும் இடம் டெல்லி என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். எனவே இங்குள்ள பாஜக, என்ஆர் காங்கிரஸ் கூட்டணியை தேர்ந்தெடுத்தால் நீங்கள் கையேந்த தேவையில்லை. ஆனால் நீங்கள் மாற்றி வாக்களித்தால் என்ன ஆகும் என்பதை முன்னாள் முதல்வர் நாராயணசாமியிடம் சென்று கேளுங்கள்.

இவர்களை, முன்பிருந்த ஆளுநர் முட்டிபோட வைத்தார். எனவே நீங்கள் வேறு யாரையாவது கொண்டு வந்து அமர வைக்க நினைத்தால் மீண்டும் முட்டிபோட வைப்போம்.

பாஜக வந்தாலொழிய புதுச்சேரியை யாராலும் காப்பாற்ற முடியாது. காங்கிரஸ் கட்சி இறந்து போய்விட்டது. இந்தியாவில் இனி காங்கிரஸ் என்ற பெயருக்கே இடமில்லை. பாஜக அவ்வளவு நல்லதை செய்துள்ளது. விவசாயிகளுக்கு கடன் வசதி செய்து கொண்டுள்ளனர். 20 கோடி பேருக்கு வீடுகள் கட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அது 2022-ல் முடியப்போகிறது.

ஆ.ராசா வாய்க்கு வந்தபடி தமிழக முதல்வரை விமர்சித்துள்ளார். இது திமுகவின் அராஜகம். அத்தோடு சேர்ந்த காங்கிரஸ் எப்படி இருக்கும் என்று பாருங்கள். புதுச்சேரிக்கு வந்திருந்த ராகுல் காந்திக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி, தவறாக மொழி பெயர்த்தார். இதுபோன்ற தில்லு முள்ளுக்கார்கள் தான் இங்குள்ளனர். காவிரி நீர் ஓட வேண்டும் என்றால் பாஜகவுக்கு வாக்களித்தால் தான் கிடைக்கும்.

நான் பணம் வாங்கிவிட்டேன் என்று எல்லோரும் சொல்வார்கள். நான் பணம் வாங்கியுள்ளேன். இந்துக்களிடம் இருந்து பணம் வாங்கியுள்ளேன். கிறிஸ்தவரோ, வேறு மதத்தினரிடமோ நான் பணம் வாங்கவில்லை. பாஜகவை ஏன் ஏற்க வேண்டுமென்றால், நாளை நம்முடைய குழந்தைகளுக்கு கோயில் இருக்க வேண்டும். அவர்கள் அங்கு சென்று வழிபட வேண்டும். உண்மையான இந்துவாக இருந்தால் பாஜகவுக்கு வாக்களியுங்கள்.

முத்தக் காட்சியை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை கமலுக்கே உண்டு. எத்தனை தயாரிப்பாளர்களை நடக்கவிட்ட கமல் கோவையில் வீதி வீதியாக அலைகிறார். கமலிடம் இருப்பது கிறிஸ்துவ பணம். நம்ம சரத்குமார் வேற மாட்டிக் கொண்டு இருக்கிறார் பாவம்.

நான் யாரையும் விமர்சிக்க மாட்டேன். தாயை பற்றி ஆ.ராசா சொல்லலாமா. வயிறு எரிகிறது. சீமான் பல்வேறு சின்னங்களைக் கேட்டார். ரேஷன் கடைக்கு கடைசியில் வந்தால் எப்படி பொருள் கிடைக்கும்.

அதுபோன்ற கதைதான் சீமான் கதையும். புதுச்சேரி எனக்கு பிடிக்கும். இங்கு மது குடித்தால் அமைதியாக போவான். ஆடமாட்டான். அடுத்தவன் வீட்டுக்கு போகமாட்டான். இங்கு பிரெஞ்சுகாரன் ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுத்தான். பிரிட்டிஷ்காரன் தமிழகத்தில் கற்றுத்தரவில்லை. இந்த சின்ன ஊரைக் கூட காங்கிரஸால் காப்பாற்ற முடியவில்லை.’’

இவ்வாறு ராதாரவி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x