Last Updated : 28 Mar, 2021 03:16 AM

 

Published : 28 Mar 2021 03:16 AM
Last Updated : 28 Mar 2021 03:16 AM

சில கட்சிக் கொடிகளை தவிர்க்கும் கூட்டணி கட்சியினர்

நடப்பு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, தமாகா,புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் களம் காண்கின்றன.

திமுக தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

இரு கூட்டணியினரும் தொகுதிகள் தோறும் வாக்கு சேகரிக்கும் போது, தொண்டர்கள் புடை சூழ கூட்டணிக் கட்சிக் கொடி, பதாகைகளுடன் கிராமங்களுக்குள் சென்று வருகின்றனர்.

கிராமங்களுக்கு செல்லும்போது..

அந்த வகையில் சில கிராமங்களில் கட்சிக் கொடி ஏந்தி வரும்போது, கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் கட்சியினர், கூட்டணியில் அங்கம் வகிக்கும் சில கட்சியினரிடம், அவர்களது கட்சிக் கொடிகளோடு குறிப்பிட்ட கிராமத்திற்குள் வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றனர்.

அண்மையில் கடலூர் தொகுதியில் அமைச்சர் சம்பத் அதிமுக சார்பில் வாக்கு சேகரிக்க கடலூரை அடுத்த சிங்குரிகுடிக்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து வேறு கிராமத்திற்குச் செல்லும் போது, ‘அங்கு பாமக கொடியுடன் வர வேண்டாம்’ என கூட்டணிக் கட்சியினரைக் கேட்டுக் கொண்டார். அதன்பின் அவர்களும் அதை தவிர்த்தனர்.

இதே நிலையை திமுகவினரும் கையாள்கின்றனர். குறிப்பிட்ட சாரார் அதிகம் வாழும் சில கிராமத்துக்குள் வாக்கு சேகரிக்கச் செல்லும்போது, ‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடியை ஏந்தி வர வேண்டாம்’ எனக் கூறி தவிர்த்து விடுகின்றனர்.

இதேபோல், விருத்தாசலம் தொகுதிக்குப்பட்ட மங்கலம்பேட்டை, பண்ருட்டி தொகுதிக்குட்பட்ட நெல்லிக்குப்பத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பாஜக கொடியைத் தவிர்த்து அதிமுக கூட்டணியினர் வாக்கு சேகரிக்கும் நிலை உள்ளது.

இது ஒரு தர்ம சங்கடமான நிலை என்றாலும், பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க இதைச் செய்வதாக இரு கூட்டணிக் கட்சியினரும் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x